தமிழ்நாடு அறக்கட்டளையின் 30-வது ஆண்டு விழா
ஜூலை 4, 2004. இடம் : சிகாகோ. தமிழ்நாடு அறக்கட்டளையின் முப்பதாவது ஆண்டு நிறைவு விழா ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்று வள்ளுவன் கூறிய வரிகள் இன்னும் இசைபட வாழுமாறு வள்ளல்கள் வாரி வழங்கிய நாளிது.

முப்பதாவது ஆண்டு நிகழ்ச்சிகள் அத்தனையும் முத்துக் கோர்த்தது போல இருந்தன; என்றாலும் முத்தாய்ப்பாய் விழா முடியவிருக்கும் தருணத்தில் திறந்த வாய் திறந்தே இருக்கும் வண்ணத்தில் பொருள் பொதிந்த புதுக்கவிதை ஒன்று அரங்கேறியது. வடஅமெரிக்க மற்றும் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நால்வர் - முனைவர் அனந்த கிருஷ்ணன், துக்காராம், பால் பாண்டியன், மாணிக்கம் - ஆளுக்கு இருபதாயிரம் டாலர் வீதம் மொத்தம் எண்பதாயிரம் டாலர்களை (மெய்யாலுமா!) தமிழ்நாடு அறக்கட்டளையின் கட்டிட வளர்ச்சிக்கென ஈந்தனர். இதை நான் 'பொருள் பொதிந்த புதுக்கவிதை' எனற அழைத்திடக் காரணம் உண்டு. எந்தவிதமான நிதி திரட்டும் விழாவோ, விளம்பரமோ, நிர்ப்பந்தமோ, நிபந்தனையோ இல்லாமல் பொருள் அள்ளிக் கொடுத்திட்ட அந்த எட்டு கரங்களுமூ இணைந்து புனைந்தது புதுக்கவிதையல்லாமல் பிறகு என்னவாம்? அந்தக் கருணைக் கரங்களுகூகு ஒரு கோடி வணக்கங்கள்.

இனி விழாவுக்கு வருவோம்.

ஜூலை 2, வெள்ளி இரவன்றே விழா களை கட்டி விட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க தேசீய வாழ்த்துகளுடனும் குத்துவிளக்கேற்றித் தொடங்கியது விழா. மேதகு கான்சல் ஜெனரல் அருண்குமார் விழாவினை வாழ்த்தித் துவக்கி வைக்க சிகாகோ தமிழ்ச்சங்கச் செல்வங்கள் ஆடிப்பாடிப் பரவசமூட்டினர்.

விழாமலர், நம் நெஞ்சிலிருந்து விழா(த) மலர். விழாவின் போது மட்டுமல்லாமல், மலரிலும் அறக்கட்டளையின் பணிகளைப் பாங்கோடு சொல்லியிருந்தது. பொதுவாக விழாக்கள் காலை எட்டு மணிக்குத் துவங்கி இரவு 12 வரை இழுத்தடித்து, இரண்டு மூன்று நாட்களும் அவசர அவசரமாக ஓடி, மூச்சிரைத்து.. இது வழக்கம். மாறாகத் தினமும் காலையில் வேண்டுவோர் விரும்பிய வண்ணம் கோல்·ப், யோகா, தியானம், பெண்களுக்கென உடல்நலம், பணவளம் பற்றிய கருத்தரங்குகள், ஆலய தரிசனம்.. எதுவும் வேண்டாமா.. இன்னும் கொஞ்சம் குட்டித்தூக்கம் என்று பல வாய்ப்புகள் இருந்தன.

சனிக்கிழமையன்று அறக்கட்டளையின் சென்னைக் கிளையில் அயராது பணியாற்றிவரும் சந்திரசேகரன் அறக்கட்டளையின் பல திட்டங்களை அழகாய் விரித்துரைத்திட, மீண்டும் சிகாகோ தமிழ்ச்சங்கம் நாட்டிய நாடகம், நகைச்சுவை என்று சுவை குன்றாது தனது திறமைகளைக் காட்டி நம்மை மகிழ்வித்தது.

தமிழகத்திலிருந்து வந்திருந்து தன்னுடைய நகைச்சுவைப் பேச்சினால் நம்மை திக்கு முக்காடச் செய்த ராஜா அவர்கள் தலைமையில் 'கல்யாணம்' என்பது கல்கண்டா, கால்கட்டா' என்ற தலைப்பில் ஒரு தர்க்கம். வாதிட்ட தமிழ் நண்பர்கள் தமிழகப் பட்டிமன்றங்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்களல்ல என்று காட்டினார்.

'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்ற தலைப்பில் டாக்டர் பாலா பாலச்சதிரனின் தலைமையில் தொழில் வல்லுநர்கள் நிகழ்த்திய கருத்தரங்கு மிகத் தேவையான பயனுள்ள ஒன்று. பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவை நெஞ்சுக்கு நிறைவு தரலாம். ஆனால் நிமிர்ந்து நிற்கவும், நேர்கொண்டு பார்க்கவும், நிதி உயர்வு மிகத் தேவை. நிதி உயர, அறமும் வளர வாய்ப்புண்டு என்றொரு குரத்தினை இந்த கருத்தரங்கு ஆழமாய்ச் சொல்லிற்று. ஹேமா ராஜகோபாலன் குழுவினரின் 'சக்தி சக்ரா' பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் மாலை மலர்ந்து மணம் பரப்பத் துவங்கியது.

இந்த ஆண்டுக்கான 'மாட்சிமைப் பரிசுசு' தொழிலதிபர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தன் அயராத உழைப்பினால் தன்னையும், உறவினர்களையும் உயர்த்தியதோடு எண்ணற்ற அறப்பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியம் அவர்களின் தொண்டு வியத்தகு ஒன்று. பன்னாரியம்மன் தொழிற்குழுமத்தின் தலைவரான இவர் தொழிலுக்கும், சமூகப் பணிகளுக்கும், சுற்றுச்சூழல் பராமரிப்புக்கும் என்று ஆற்றும் பன்முகக் கொடையைப் பேரா. அனந்தகிருஷ்ணன் அவர்கள் விவரித்தார். 'சங்கரா விழி அறக்கட்டளையின் டாக்டர் ரமணி மற்றும் வைரமுத்து ஆகியோரும் பாலசுப்ரமணியத்தின் வியத்தகு பங்களிப்பைப் பாராட்டிப் பேசினர். எளிமையும் அடக்கமுமாகத் தன் விருது ஏற்புரையை வழங்கினார் இந்தத் தொழிலதிபர் திலகம்.

சனிக்கிழமை இரவு நிகழ்ச்சிகள் சப்த சுரங்கள் இசை நிகழ்ச்சியுடன் ஓய்வுற்றன. சப்ரசுரங்களின் போது மாநிலங்களுக்கிடையிலான இசைப் போட்டியில் செயிண்ட் லூயிஸ், டெட்ராய்ட், மற்றும் சிகாகோ தமிழ் நண்பர்கள் தம் இசைத்திறனால் அசத்தினர்.

ஜூலை 4 ஞாயிறன்று பொதுக்குழுக் கூட்டம். பொதுவாக இதற்கு ஆட்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். ஆனால் இந்த முறை அரங்கு நிரம்பியிருந்தது. டாக்டர் அனந்தகிருஷ்ணன் சில அழகான கருத்துக்களை நம்முன் வைத்தார். ''அறக்கட்டளையின் சென்னைக் கிளை இன்று தமிழகத்தில் மக்களிடையே ஓர் அங்கமாக உயர்ந்து வருகிறது. இருபத்தேழு பேர் பணியாற்றும் இம்மையத்தின் உயர்வு .னிவரும் நாட்களில் அமெரிக்காவை மட்டும் சார்ந்திராமல் அங்கிருந்து (சென்னை) இப்பணி இயற்ற இங்கிருக்கும் (அமெரிக்கா) அறக்கட்டளையின் உயர்வு உயர்ப் பொருளாகும்'' என்றார் டாக்டர் அனந்தகிருஷ்ணன்.

அறக்கட்டளையும் தமிழ்ச்சங்கப் பேரவையும் ஏன் இணைந்து விழா எடுக்கக் கூடுவதில்லை என்ற சூடான விவாதத்தின் இறுதியில் ஒருமித்து எடுத்த முடிவு. ''இணைந்து நடத்த வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. என்றாலும் இவ்விரண்டு இயக்கங்களும் தத்தம் தனித்தன்மைக்குப் (individuality) பங்கம் வராதபடி விழா எடுப்பதாயின் ஒரு ஆண்டு அறக்கட்ளையும், மறு ஆண்டு தமிழ்ச்சங்கப் பேரவையும் மாறிமாறிப் பொறுப்பேற்று நடத்துவது பொருத்தமாகும்''.

மதியம் மீண்டும் ராஜா அவர்கள் தலைமையில் ''அருளும் பொருளும்'' என்ற தலைப்பில் கவியரங்கத்துடன் துவங்கிற்று. ''அருளுக்கும் பொருளுக்கும் இத்தனைப் பொருளா, ஓ இப்படியும் சிந்திக்கலாமோ'' என்று ராஜாவே வியந்து போனர்.

இனி, 'பரதத்தில் பாரதி' என்ற பரத நாட்டியம், அந்த முண்டாசுக் கவிஞனின் பாடல்கள் சலங்கை ஒலியில் முரசமாய் முழங்கிற்று. ''பெக்கி டக்ளஸ் இல்லாமல் அறக்கட்டளை நிகழ்ச்சியா?'' என்று கேட்கின்ற அளவுக்கு அவர் நம்முள் ஒருவராகிப் போனார். தமிழகத் தொழுநோயினருக்கு அவர் ஆற்றிவரும் அரும்பணியைக் கேட்டு அரங்கமே உரைந்து போயிற்று. அவரது உரை பெருமூச்சில் அஸ்தமித்து விடாமல் நம்பிக்கையில் உதயமாக வழி கோரியது. இளவல் பிரேம் ஷண்முகவேலு கவனிக்கப்பட வேண்டியவர். இங்கு அரசியலில் இந்தியர்களனி பங்கு எத்தனை அத்தியாவசியம் என நம் தலையில் குடூடாமல் குட்டினார்.

'அன்றும் இன்றும்' என்ற அலங்கார அணிவகுப்பு இங்குளூள இளைஞர்களைக் கொண்டு வழங்கிய நிகழ்ச்சி, மிகப் புதுமையான ஒன்று. கண்ணுக்கு விருந்தான இந்த நிகழ்ச்சியை மிகச் சிரத்தையுடன் படைத்திருந்தனர். சிரிப்புக்கும் குறைவில்லை.

அடுத்து வந்தது கவிப்பேரரசுக்குப் பாராட்டுவிழா. இந்த ஆண்டு சாகித்ய அகாதமி கவிஞரின் 'கள்ளிக்காட்டு இதிகாசத்தை'த் தேர்ந்தெடுத்துக் கவுரவித்தமைக்கான பாராட்டு விழா. கவிஞரின் எதூதுக்களைக் கருக்குலையாமல், கருத்துச் சிதையாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திடும் கனடா பேராசிரியர் மேனன், பெர்க்லி பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், மற்றும் டாக்டர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிட, வாழ்த்தினை ஏற்றுக் கவிப்பேரரசு அவர்கள் வழங்கிய உரை வற்றாத தமிழ் நிரூற்று, அலை ஏற்றி நுரை கக்கிடும் கடலினுமூ அகண்ட, ஆழமான ஒன்று.

லக்ஷ்மண் ஸ்ருதி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நமக்குப் பிரியா விடையளித்தது.

© TamilOnline.com