அபிநயாவின் 'அசைந்தாடும் கவிதை'
ஜுன் 20, 2004 அன்று சான் ஹோசே மெக்ஸிகள் ஹெரிடேஜ் அரங்கில் நடைபெற்ற அபிநயா நடனக் குழுமம் வழங்கிய 'அசைந்தாடும் கவிதை' (Poetry in Motion) வந்திருந்தோரை வசீகரித்தது. தனித்துவமிக்க ஆனால் பராம்பரியம் வழுவாத நடனம் அமைத்திருந்தார். அபிநயாவின் நிறுவனரும், கலை இயக்குநருமான மைதிலி குமார்.

தீபாஞ்சலியுடனும், மகாகவி பாரதி தமிழில் வடித்த பங்கிம் சந்திரரின் 'வந்தே மாதரம்', பாடலுடனும் துவங்கியது நிகழ்ச்சியது. மீராபாய், நார்சி மேத்தா, புரந்தரதாசர், பாபாநாசம் சிவம் ஆகியோரின் அற்புதக் கிருதிகள் நிகழ்ச்சியில் இடம் பெற்றன. இசையமைத்துப் பாடிய ஆஷா ரமேஷ் தனது உற்சாகம் ததும்பும் குரலில் பாடல்களுக்கு உயிரூட்டினார்.

மைதிலி குமாரின் சிஷ்யர்கள் ஒயிலுடனும், துல்லியமாகவும் நடன அசைவுகளை அபிநயித்துப் பாடலின் பொருளையும் உணர்வையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினர். மைதிலியே இரண்டு உருப்படிகளுக்கு நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். திருவேங்கடவனுக்காகத் தவிக்கும் நாயகியாக அன்னமாச்சார்யாவின் கிருதியின் விரைந்த ஜதிக்கு விறுவிறுப்பூட்டிய மைதிலி, ரவீந்திரநாத் தாகூரின் ஷ்யாமா நாடகத்தின் 'துமி ஜானோ நாஹியின்' பாவபூர்வமான இசைக்கு உருகிக் கசிந்தார்.

இந்தியக் கலாசார வானவில்லின் வண்ணங்களைக் காண விழைந்தோருக்கு இது அற்புத விருந்தாக இருந்தது.

உஷா தேசிராஜு

© TamilOnline.com