சென்னை வழக்கறிஞர்கள் Vs மதுரை வழக்கறிஞர்கள்
கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு அருகேயுள்ள உலகனேரியில் உயர்நீதிமன்றக் கிளைக்கான அடிக்கல் நாட்டுவிழா 200ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெற்றது. கட்டடம் முற்றுப்பெற்று ஓராண்டுக் காலம் ஆகிவிட்டது. மூன்று முறை திறப்புவிழா அறிவிக்கப்பட்டும், பலவித காரணங்களால் திறக்கப்படாமலே இருக்கின்றது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டிடத்திற்கான திறப்புவிழாத் தேதியை, அதிகாரபூர்வமாக சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் சின்னையா நாயுடு அறிவித்தார்.

பெரும்பாலான மாவட்டங்களின் அதிகாரம் சென்னை உயர்நீதிமன்ற வரம்புக்குள்ளேயே நீடிக்க வேண்டும் என்றும், கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை போன்ற மாவட்டங்களின் வழக்குகள் மட்டுமே மதுரைக் கிளைக்குக் கீழ் மாற்றப்பட வேண்டும் என்றும் போராடுகின்றனர் சென்னை வழக்கறிஞர்கள்.

மதுரைக் கிளை ஆளுமைக்கு உட்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கோரும் சென்னை வழக்கறிஞர்கள் கருத்துக்குத் தென்மாவட்ட வழக்கறிஞர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஜஸ்வந்த்சிங் கமிட்டி சிபாரிசுகளில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆனால் சென்னை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் தற்போதைய சூழலில் அக்கமிட்டியின் பரிந்துரை சரிவராது என்றும் அதற்குப் பதிலாக இன்றைய சூழ்நிலைக்கேற்ப மற்றொரு கமிட்டியை அமைத்து அதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் கூறுகிறார்.

பிரபாகரன் தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி லகோட்டியாவைச் சந்தித்து அவரிடம் சென்னை வழக்கறிஞர்களின் வாதங்களை எடுத்துரைத்தார். இதையடுத்து நீதிபதிகள் ஏ.ஆர். லட்சுமணன் மற்றும் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிந்துரைத்தபடி எந்தெந்த மாவட்டங்களை எதில் இணைப்பது என்பது குறித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி தலைமையில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணை மதுரைக் கிளைக்கு 16 மாவட்டங்களும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 14 மாவட்டங்களும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் திருத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு :கேடிஸ்ரீ

© TamilOnline.com