மீண்டும் காட்டிலிருந்து நாட்டுக்கு!
தமிழக, கர்நாடக இரு மாநில அரசுகளுக்கும் நெருக்கடியாகவே சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரம் இருந்து வந்தது. இந் நிலையில் நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் வீரப்பனின் புதிய அவதாரம் வெளிப்பட்டது. இதுவரை கடத்தல்காரன், கொள்ளைக்காரன், கொலை காரன் என்னும் நிலைகளில் இருந்து தமிழ்த் தேசியத் (அரசியல்வாடை வீசும்) தலைவனாக உயர்த்தப்பட்டான். இத் தருணத்தில் வீரப்பன் முன் வைத்த 14 கோரிக்கைகளும் அதனை வெளிப்படுத்தின.

நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் இரு மாநில அரசுகளுக்கிடையிலும் இதுவரை இல்லாத நெருக்கடிச் சூழல் உருவானது. எப்படியும் அவரை மீட்டு விட வேண்டுமென்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நல்லெண்ண தூதுக் குழுக்களின் முயற்சியால் மூன்று மாதங்களுக்கு பின்னர் ராஜ்குமார் மீட்கப்பட்டார்.

ஆனால் வீரப்பனின் கோரிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. கடந்த நவம்பர் 15 ஆம் தேதியன்று ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பிறகு கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வீரப்பனை தேடிப்பிடிக்க சிறப்பு அதிரடிப்படை தாக்கு தல்கள் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவித்தன.

'ஆபரேஷன் ஜங்கிள் ஸ்டார்ம் II" என்கிற ரகசிய ஆவணத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டனவாம். அதாவது குறிப்பிட்ட நாட்களுக்குள் வீரப்பனையும் அவனுடைய ஆட்களையும் உயிருடனோ, அல்லது பிணமா கவோ பிடிக்க வேண்டும். இதற்காக காட்டினுள் ஆயுதம் தாங்கிய வேறு எந்த கும்பலையும் வலுவிழக்கச் செய்ய வேண்டும். இந்த தாக்குதல் 60 நாட்கள் என்றிருந்து பின்னர் 90 நாட்கள் என நீட்டிக்கப்பட்டது.

காலக்கெடு குறித்து தாக்குதல்கள் முடுக்கி விடப்பட்டன. எப்படியும் வீரப்பன் பிடிப்பட்டு விடுவான் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் சிறப்பு அதிரடிப்படை நவீன ஆயுதங்களுடன் பிஎஸ்எ·ப் படையின் கூட்டாக வீரப்பனை தேடும் வேட்டையில் வந்து சேர்ந் தனர். பிஎஸ்எ·ப் காலடி எடுத்து வைத்ததுமே ஆபரேஷன் ஜங்கிள் ஸ்டார்ம் படு தீவிரமாகத் தெரிந்தது.

அதற்குள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியமையால் வீரப்பன் விவகாரம் ஒரு பொருட்டாககூட இருக்க வில்லை. தேர்தல் பிரச்சாரத்திலும் வீரப்பன் விவகாரம் முதன்மைப் பிரச்சனையாக எவருக் கும் இருக்கவில்லை. திமுக ஆட்சி கவிழ்ந்தது. புதிதாக அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் வீரப்பன் விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

இம்முறை அதிரடிப்படைத் தலைவராக தேவாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு மலைவாழ் மக்கள் ஒருபுறமும், மனித உரிமை கழகத்தினர் இன்னொருபுறமும் எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டிருக் கின்றனர். ஆனால் முதல்வரோ கிராம மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் வீரப்பனை பிடிக்கும் பணி நடைபெறும் எனக் கூறுகின்றார்.

தேடுதல் வேட்டைக்கு 'ஆபரேஷன் ஜெ.ஜெ' மற்றும் 'ஆபரேஷன் வீரப்பன்' என்று பெயரிட்டி ருக்கிறார்கள். அதிரடிபடையின் மாநிலக் கூட்டுத் தலைவர் தேவாரம், வீரப்பனை பிடிக்காமல் காட்டிலிருந்து திரும்புவதில்லை எனக் கூறியுள்ளார்.

பதினாறாயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பள வுள்ள காட்டுப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை காக கூட்டு அதிரடிப்படையினர் 21 ஜூன் அன்று அதிகாலை ஒரே சமயத்தில் காட்டுக்குள் நுழைந்தனர். 40 பிரிவுகளாகச் சென்று வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக மலைவாசிகளின் அன்பையும் ஒத்துழைப்பையும் பெறுவதே நோக்கமாக கொண்டு செயற்படுகின்றனர். மலைவாசிகளிடமிருந்த 600க்கும் மேற்பட்ட மனுக்களை வாங்கியுள்ளனர். அப்பாவி மக்களுக்கு எந்தவித தொந்தரவு எதுவும் இல்லாமல் தமது நடவ டிக்கை இருக்குமென தேவாரம் குறிப்பிட்டுள்ளார்.

வீரப்பன் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு காலநிர்ணயம் இல்லை. வீரப்பனை பிடிக்கும் வரையில் கூட்டு அதிரடிப்படையின் தேடுதல் தொடரும். கடந்த கால கட்டங்களில் மேற்கொண்டது போல் இல்லாமல் தற்போது புதிய அணுகுமுறையில் தேடுதல் வேட்டை தொடருமென உறுதிபட தேவாரம் கூறியுள்ளார்.

ஒவ்வொருமுறை வீரப்பன் வேட்டையின் போது அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துதான் இது புதிய ஆட்சியின் உதயத்துடன் தேவாரம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது வீரப்பன் பிடிபடுவானா? அல்லது முந்தைய தொடர்கதையின் ஓர் புதிய அத்தியாயமாகவே இது இருக்குமா என்ற சந்தேகம் சில மட்டங்களில் நிலவுகிறது.

துரைமடன்

© TamilOnline.com