மே 2001 : வாசகர் கடிதம்
ஏப்ரல் மாத இதழ் மிகவும் அற்புதமாக இருந்தது. குறிப்பாக, தமிழ் புத்தாண்டினையொட்டி, வெளியாகியிருக்கும் கே.பி.சந்திர சேகரின் நேர்முகம், மிகவும் பாராட்டத்தக்கதாய் இருந்தது. கடந்த மாதங்களை விட, சினிமா சினிமா அதிகப் பக்கங்களை விழுங்கியுள்ளது. இந்தியாவில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி பத்திரிக்கைகளுக்குக் காத்திருப்பது போல அடுத்த இதழ் எப்போது என்று ஆவலுடன் காத்திருக்கிறோம், இப்போதெல்லாம்.

கணேஷ் பாபு,
ஸிலிக்கான் வேலி, கலிபோர்னியா.

******


எனக்கு அனுப்பப்பட்ட மாதிரிப் பிரதிகளைப் படித்துப் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது என்றாலும், குழந்தைகள் பகுதியில்லாதது ஒரு குறைதான். என் மக்களுக்கு, நான் தமிழைக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளுக்கான பகுதியிருந்தால், அவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தினை ஊட்டமுடியும் என்று நினைக்கிறேன். மிகவும், மகிழ்வுடன், உங்கள் பத்திரிக்கையை பிரபலப்படுத்துவதற்கு உதவ விரும்புகிறேன்.

டாக்டர். பெரியசாமி செல்வராஜ்,
அட்லாண்டா, ஜ்யார்ஜியா.

******


'தென்றல்' இதழ் அருமையாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டை மறவாமல் நினைக்க வைத்து மகிழ்ச்சியூட்டுகிறது.

உமா ஹரிஹரன், ·ப்ரிமொன்ட், கலிபோர்னியா.

******


நீங்கள் செய்யும் இந்த பத்திரிக்கைப் பிரசுரம், மிகவும் எளிதான வேலையல்ல..! உண்மையிலே மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான்.

திருமதி. சிவ சுப்பிரமணியம், கானடா.

******


தென்றல் வாசகர்கள் எல்லோருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பழனியப்பன் கண்ணப்பன்,
கானடா.

******


தென்றல் மிக நன்றாக இருக்கிறது. அதன் சொகுசான பக்கங்களிலிருந்து, உள்ளே இருக்கும் கதை, கட்டுரைகள், மற்றும் நண்பர் வாஞ்சிநாதனின் குறுக்கெழுத்துப் புதிர் வரை, எல்லாவற்றையும் இரசிக்கின்றேன். உங்கள் தமிழ் பத்திரிக்கை முயற்சிக்கு, என் அன்பான வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களுடனும், மிக்க அன்புடனும்,

கீதா பென்னட்,
லாஸ் ஏன்ஜலிஸ், கலிபோர்னியா.

******


கடல் தாண்டி வந்துள்ள தமிழரை தென்றலாய் வந்து தழுவும் தென்றலே!

மின்னலாய் என் மனதில் நீ புகுந்தாய்
எந்நாளும் நீ வாழ்க வளமுடன்!

லட்சுமி ஜெகதீஷ்,
ரான்ச்சோ க்ரோவா, க்லிபோர்னியா.

******


தென்றல் மார்ச் மாத இதழைப் படித்தேன். ஒரு நண்பர் கொடுத்தார். நாடு அதை நாடு சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. இந்தியாவின் நிலையை நன்றாக கூறியிருக்கிறார் ராதிகா. மேலும் சமையல் குறிப்பும் நன்றாக இருந்தது. உருளைக்கிழங்கு ஐட்டம்ஸ் சரி. ஆனால் கோதுமை அதிரசத்திற்கு ஏலப்பொடி சேர்த்து இடிக்க வேண்டும் என்று எழுதியிருந்தது. இங்கு உரல் உலக்கை ஏது. இடிக்காமல் செய்தால் பற்கள் பலமாக உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட முடியும். மேலும் கோதுமை இடியாப்பம் சாதாரண இடியாப்பம் மாதிரி கம்பியாக கோர்த்துக் கொண்டு வரவில்லை.

மற்றபடி பேரழிவில் உதவாத பேரழகிகள் கட்டுரை மிகவும் சூப்பர்ப். இந்திய அழகிகள் இதைப் பார்த்தும் திருந்தவில்லையென்றால் இந்தியாவில் உலக அழகிப் போட்டிகள் நடத்தி பணத்தை விரயம் செய்வதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். தெய்வ மச்சான் பதில்களும் சூப்பர்ப்.

கல்யாணி ஸ்ரீதரன்,
லிவர்மோரே, கலிபோர்னியா.

© TamilOnline.com