விண்ணுக்கும் மண்ணுக்கும்
நடிப்பு : சரத்குமார், விக்ரம், ரமேஷ் கண்ணா, நம்பியார், வினுசக்ரவர்த்தி, ராமி ரெட்டி, சுவாமிநாதன், மயில்சாமி, காகா ராதாகிருஷ்ணன், குஷ்பு, தேவயானி, சுகுமாரி இவர்களுடன் நட்புக்காக... அப்பாஸ், இயக்குநர்கள் விக்ரமன்-அகத்தியன்.
இயக்கம் : ராஜகுமாரன்
இசை : சிற்பி

கனவில் வந்த பெண்ணையே தேடி மணக்கிற குருட்டாம் போக்கான கதை. கனவில் யாருடைய உருவமும் அத்தனை தெளிவாகத் தெரியாது, ஏற்கெனவே பழகிய முகமாக இருந்தால் ஒழிய. இந்த உண்மை புரிந்து விட்டால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வெளியான பாதி படங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். கதையின் அடிமடியிலேயே கைவைப்பதைத் தவிர்த்து அடுத்த கட்டத்துக்குப் போவோம்.

18 பட்டி நாட்டாமையாக சரத்குமார். நடிக்கும்போது அவருக்கே பல இடங்களில் சிரிப்பு வந்திருக்கும். நடிக்கத் தெரிந்தவராக இருப்பதால் அதைக் கட்டுப்படுத்தி யிருக்கிறார். அவருடைய தம்பி விக்ரம். லண்டனில் படித்துவிட்டுத் திரும்பும் அவர் பஞ்சுமிட்டாய் கலரில் ஆடைகள் தரித்து ராமராஜிஸத்தைப் பின்பற்றுவதற்கு ஒரு காரணமும் இல்லை.

கனவில் வந்த பெண் நடிகை தேவயானி என்பதை அறியாமல் அவர் காதலிக்கத் துவங்குவதிலும் ஷ¥ட்டிங் ஸ்பாட்டில் அவரைப் பெண் கேட்கப் போவதும் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் நல்ல நகைச்சுவை. 'இது என்ன நான்சென்ஸ்' என்று தேவயானி பொங்கிவிட்டுப் போக, விண்ணிலிருக்கும் தாரகைக்கும் மண்ணிலிருக்கும் விவசாயிக்கும் காதல் வரக்கூடாதா என்று கதை பின்னியிருக்கிறார்கள். பின்பாதியில் கதை ரொம்பத் தடுமாறுகிறது. நான்கைந்து முறை படம் முடிந்துமுடிந்து ஆரம்பிக்கிறது.

தம்பியை உயிருக்கு உயிராக நேசிக்கிறார் சரத்குமார். தம்பி தூங்கும் கட்டிலுக்கு மேலே கொசுவலை கட்டிவிட்டு, போதாக்குறைக்கு இரவெல்லாம் டார்ச் லைட் அடித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சபாஷ் டைரக்டர்! விக்ரமன் பாசறையில் இருந்து சரியான வாரிசு.

தேவயானி சொந்தக்குரலில் பேசியிருப்பது, நடிகையின் கதை என்பதற்காக ஓகே. இப்படிப் பேசினால் வருங்காலத் தமிழ்க்குழந்தைகள் தமிழை தமாஷ் பண்ணுவதற்கு மட்டும்தான் பிரயோகிப் பார்கள்.

''உனக்கென உனக்கென பிறந்தேனே...'', ''ஆகாயம் பூக்கள் பூக்கும் நேரம்'', ''பாசமுள்ள சூரியனே'' பாடல்கள் சிற்பியை மீண்டும் பேச வைக்கும்.குஷ்பு, நம்பியார், வினுசக்ரவர்த்தி, காகாராதாகிருஷ்ணன், சுகுமாரி போன்ற வர்கள் படத்துக்கு ஏற்ற கெட் அப்பில் அசத்தியிருக்கிறார்கள்.

ரமேஷ் கண்ணா, மயில்சாமி, சுவாமிநாதன் ஆகியோர் சினிமாகாரர்களாகவே வந்து, சினிமாவைக் கிண்டலடித்து விட்டுப் போகிறார்கள்.

இயக்குநர்கள் விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கிவருவது நல்லது.

தமிழ்மகன்

© TamilOnline.com