ராதா கல்யாண உற்சவம்
கடந்த ஜுன் மாதம், 10ம் தேதியன்று, சன்னிவேல் சனாதன தர்ம மையத்தில், ராதா கல்யண உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சான் ஹோசே வைதீக வித்யா கணபதி கோவில் இதனை ஏற்பாடு செய்திருந்தது. கும்பகோணம் கோவிந்தபுரத்தைச் சேர்ந்த திரு இ.க.சீனிவாச பாகவதர், பக்திரசம் பெருக இதனை பக்தர்களுக்காக நடத்தி வைத்தார். அவருடன் திரு கிருஷ்ணமூர்த்தி வெங்கடராமன், திரு சாய்பிரகாஷ் நடராஜன், திரு முரளிசுப்பிரமணியம் ஆகியோர் ஹார்மோனியம், மிருதங்கம், உடன்பாட்டு என்று இணைந்து வழங்கினர். அஷ்டபதி, புரந்தர தாஸர், கபீர் தாஸர், மீரா, தியாகைய்யர் போன்றோரது கீர்த்தனங்களை பாடி இடையே சிறு விளக்கங்களும் கொடுத்து பக்தியும், இசையும் கலாசாரத்தின் இரு கண்கள் என தெளிவாக காட்டினர். பக்தர்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொள்ளும் உணர்வும், இறைவனின் ஆசியும் பெற்றனர். இறுதியில் சுவையான பிரசாதமும் வழங்கப்பட்டது.

ராதா கல்யாணம் என்பது ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணையும் வைபவம் ஆகும். இந்த தத்துவத்தை, சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், நம் முன்னோர்கள் இயற்றி இருப்பது, நம்முடைய பாரம்பரிய சொத்து. இதை, இங்கு கலிபோர்னியாவில் நடத்திய திரு கணேஷ சாஸ்திரிகளுக்கும், மற்றும் சாக்ரமெண்டொவைச் சேர்ந்த திரு உமா சங்கர் சாஸ்திரிகளுக்கும், பண்டிட் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி.

© TamilOnline.com