அதிசயமான கும்பாபிஷேகம்
இறையுணர்வு மிக்க மக்கள் வாழும் புண்ணிய பூமி பாரதபூமி. பல்வேறு மதங்கள் வேரூன்றி இங்கு பக்தி என்னும் பயிரைத் தொடர்ந்து வளர்த்து வந்திருக்கின்றன.அதில் ஒன்றுதான் சைவ மதம். ''தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'' என்பார் மாணிக்க வாசகர்.

சைவப்பெரியார்கள் பாடியுள்ள பாடல்கள் ''பன்னிரு திருமுறைகள் என்ற பெயரில் தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் பன்னிரண்டாவது திருமுறை 'பெரிய புராணம்' என வழங்கப்படுகிறது.

அறுபத்துமூன்று சைவ நாயன்மார்களின் வரலாறு கூறும் பெரியபுராணத்தில் 'பூசலார் நாயனார்' என்பவரது வரலாறு புதுமையான ஒன்றாகும். கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவ இவர், தமிழகத்தில் திருநின்றவூரில் வாழ்ந்தவர். ஆண்டவனிடம் கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த ஆண்டவனுக்குக் கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினார். பொருள் தேடி அலைந்தார். ஆயினும் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை. எனவே மனத்தளவில் கற்பனையிலேயே கோயில் கட்ட ஆரம்பித்தார்.

தளம் போடுவதில் ஆரம்பித்து, வாசக்கால், கர்ப்பக்கிருகம், சுற்றுச்சுவர், மேற்கூரை, துவஜஸ்தம்பம், பிரகாரம் என்று படிப்படியாகக் கற்பனையிலேயே கோயிலைக் கட்டி முடித்தார். தான் மனத்தளவில் கட்டிய கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்த ஒரு நல்ல நாளையும் குறித்துவிட்டார்.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால் காஞ்சிபுரத்தை ஆண்ட 'காடவர் கோமான்' என்ற மன்னனும் தான் கட்டியிருந்த கைலாசநாதர் கோயிலுக்கும், பூசலார் குறித்திருந்த அதே நாளில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்திருந்தான்.

சிறந்த சிவபக்தனான அந்த மன்னனுடைய கனவில் சிவபெருமான் தோன்றி, பூசலார் கட்டியுள்ள கோயிலின் கும்பாபிஷேகத்திற்குத் தான் செல்ல வேண்டுமென்றும், மன்னன் கட்டியுள்ள கோயிலின் கும்பாபிஷேக நாளை மாற்றி வேறொரு நாளைக் குறிக்குமாற பணித்தான்.

மன்னன் தான் கண்ட கனவால் குழம்பினான். மறுநாளே திருநின்றவூருக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கே புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எதுவும் தென்படவில்லை. கும்பாபிஷேகத்திற்கான ஆரவாரமும் காணப்படவில்லை. பூசலார் கட்டியது கற்பனைக் கோயில் என்பது பிறகுதான் தெரிந்தது. அவரது ஆழ்ந்த பக்தியின் பெருமையை உணர்ந்த கொண்ட மன்னன் அவரை வணங்கி விட்டு ஊர் திரும்பினார்ன.

சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருநின்றவூர் இருக்கிறது. அங்குள்ள சிவன் கோவில் ''மனக்கோவில் கொண்டார் கோவில்'' என்று பொருள் படும்படியாக 'ஹிருதயாலேசுவரர்' என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் மூலஸ்தானத்தின் நேர் எதிரே பூசலார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலைப் பூசலார் நினைவாகக் கட்டிய காடவர்கோன் பற்றி அவன் கட்டியுள்ள காஞ்சி கைலாசநாதர் கோயில் கல்வெட்டு 'அசரீரி கேட்டான்' என்றும், ''அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே' என்றும் பாராட்டுகின்றது.

பண்டைக் காலச் சான்றோர் பெருமக்கள் அழியும் பொருட் செல்வத்தை அழியாமல் என்றும் நிலைத்திருக்கும் வண்ணமாக கோயில்களை எழுப்பி ஆண்டவனுக்கே அவன் அளித்த செல்வத்தை அர்ப்பணித்து இறைப்பணி செய்திருப்பதையும் பொருள் இல்லாதவரும் பக்தி மார்க்கத்தால் இறையருள் பெற்றிருப்பதையும் பூசலார் நாயனார் வரலாறு உணர்த்துகின்றது.

Dr.அலர்மேலு ரிஷி

© TamilOnline.com