மலபார் முட்டை குருமா
தேவையான பொருட்கள்

முட்டை 4
அரைத்த தேங்காய் 1/2 கப்
கசகசா 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 3
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி சிறிய துண்டு
பூண்டு 4 பல்
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை, கடுகு,
உப்பு, எண்ணெய் சிறிதளவு

செய்முறை

முதலில் முட்டையை வேகவைக்கவும். வெந்தவுடன் ஓட்டை நீக்கி வைத்துக் கொள்ளவும். கசகசாவை நன்கு அரைத்துக் கொண்டு தேங்காயுடன் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சியையும் பூண்டையும் நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும். அத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைப் போடவும். வெங்காயம் சிவந்தவுடன் தக்காளியை சேர்க்கவும். பின்னர் மஞ்சள் பொடி, கொத்துமல்லி, மிளகாய் தூள் ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும். இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும். தேவையான உப்பு சேர்க்கவும். இது கொதித்து நன்கு சிறிது கெட்டியானதும் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும். பின்னர் முட்டையை பாதியாக வெட்டி அதில் சேர்க்கவும். பின்னர் கரம் மசாலாவைத் தூவவும். நன்றாகக் கிளறியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இதில் கடுகையும், கறிவேப்பிலையையும் தாளித்துக் கொட்டவும்.

சப்பாத்திக்கு சுடச்சுட பரிமாறினால் சுவையாக இருக்கும்.

© TamilOnline.com