எக்ஸோடஸ் K.B.சந்த்ரசேகர்
குட் ஈவ்னிங் சந்த்ரா!. முதலில் உங்களுடைய ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து, உங்கள் எக்ஸோடஸ் பயணம் வரைச் சொல்லுங்களேன்.

நான் ஒரு சென்னைவாசி. முதன் முதலில் திருச்சியில் உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில்தான் என்னுடைய ஆரம்பகால படிப்பெல்லாம். பிறகு, 1971-ல் சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா ஹையர் செகண்டரி பள்ளியில் 6ம் வகுப்பு முதல், 11ம் வகுப்பு வரை படித்தேன், பிறகு, பி.யூ.ஸி, மற்றும் பி.எஸ்.ஸி, (·பிஸிக்ஸ்) வரை, விவேகானந்தா கல்லூரியில் படித்தேன். அதற்கு பிறகு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி-யில் (மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆ·ப் டெக்னாலஜி), எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பில் பி.டெக் பட்டம் பெற்றேன். 1983-ல் பெங்களூரில் உள்ள "விப்ரோ" வில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு, 1990 வரை வேலை செய்தேன். அந்த நாட்கள் மிகவும் சுவாரசியமான நாட்கள். விப்ரோவும், ஒரு தொடக்கநிலை கம்பெனியாகத்தான் இருந்தது. மொத்தமாகவே, ஒர் அறுபது அல்லது எழுபது பேர்தான் இருந்திருப்போம். ஒரு கம்பெனியை அடிமட்டத்திலிருந்து வளர்ப்பது என்பதைக் கண்கூடாகப் பார்க்கவும், கற்றுக்கொள்ளவும் முடிந்தது. தவிர, அந்த நாட்களிலேயே, மிகவும் வித்தியாசமான, முற்போக்கான, அமெரிக்க கம்பெனி நிர்வாக ஒழுங்கும், கலாச்சாரமும் அங்கு இருந்தது, 1990-ல் நான் அமெரிக்காவுக்கு வந்தேன். 1992-ல் ·போரஸ் கம்பெனியை ஆரம்பித்தேன். என்னுடைய சக நிறுவனர் ஜகதீஷ¤டன் 1993-ல் சேர்ந்தேன். 1994-ல் இண்டெர்நெட்டின் பரிமாணத்தையும், வளர்ச்சியையும் உணர்ந்ததால், எக்ஸோடஸ் என்னும் கம்பெனியை ஆரம்பித்தோம். இந்த கம்பெனி, ஐடிஸி (IDC) என்று சொல்லப்படும், இண்டெர்நெட் டேட்டா சென்ட்டர்களாக உருவாகியது. 1998-ல் கம்பெனியை தனியார் நிறுவனத்திலிருந்து, பொதுபங்கு நிறுவனமாக கொண்டு சென்றோம்,

சந்த்ரா, மிகவும், ரத்தினச் சுருக்கமாக, தெளிவாக, உங்கள் இதுவரை உங்கள் பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் வாழ்க்கையைப் பற்றிக் கூறினீர்கள். உங்கள் 'எக்ஸோடஸ்' நாட்களின் அனுபவங்களை, நீங்கள் சந்தித்த சவால்களை, வெற்றிகளைப் பற்றிக் கூற முடியுமா..? கட்டாயமாக, பலவித சோதனகளையும், தடைகளையும், தாண்டி, நீந்தி வந்திருப்பீர்கள். அவற்றில் சில நினவுகளை, எங்கள் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளமுடியுமா..?

இந்த கேள்வி மிகவும் சுவாரசியமானது. ஏனெனில், 'எக்ஸோடஸ்' நாட்களில், மிகவும் கடினமானவை என்று கருதக்கூடிய அளவுக்கு, எதையும் நினைக்கவில்லை. ஒவ்வொரு கணத்தையும் நான் மிகவும் மகிழ்வுடன்தான் எடுத்துக்கொண்டேன், சந்தித்தேன். அதேசமயம், சவாலான கணக்களும் இருந்திருக்கின்றன. மாலை 6 மணி அளவில், அடுத்தநாள் இந்த கம்பெனி உயிரோடிருக்குமா என்னும் அளவுக்கு, நிச்சயமில்லா நிமிடங்களும், நாட்களும் இருந்திருக்கின்றன. சுயமாக சாதிக்கவிரும்புவதற்கு கொடுக்கும் விலைதான், இந்த மாதிரியான சவால்கள்!. இந்தமாதிரியான கணங்கள் எனக்குப் புதியவை அல்ல. இங்கு, என்னுடைய முதல் கம்பெனியை ஆரம்பிக்க நினைத்த போது, என்னிடம் ஐந்தாயிரம் டாலர்கள்தான் கையிருப்பு. இரண்டு குழந்தைகள், மனைவி, சிறிய அபார்ட்மெண்ட் குடியிருப்பு, என்னுடைய H-1 விசாவை நானே 'ஸ்பான்ஸர்' செய்து கொள்ளல்..இவைதான் நான் என்னுடைய முதல் கம்பெனி ஆரம்பித்த நாட்களின் நிலை. அறுபது நாட்களுக்கு மட்டுமே தாக்கு பிடிக்கக்கூடிய நிதி நிலைமை,, இந்த நாட்டில் எனக்குப், பலரை தெரிந்திராத நாட்கள்...என் குடும்பத்தின் ஆதரவுமட்டும் மிகவும் உறுதியாக இருந்தது. 'சரி.. இதுதான் உங்கள் முடிவானால், முயற்சி செய்து பாருங்கள், முயற்சி தோல்வியானாலும் பரவாயில்லை. .. திரும்பிப் போக, கையில் 'டிக்கட்' இருக்கிறது' என்னும், என் மனைவியின் ஊக்கம், எல்லாமாகச் சேர்ந்து என்னை இயங்கவைத்தன. நான் எப்போதும், ஒரு விளிம்பிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டதால், இது ஒன்றும், அந்த அளவுக்குக் கடினமாக இல்லை.

அதாவது, 'நிரூபி அல்லது அழிந்து போ' (prove or perish) என்னும் நிலைமை.. இல்லையா..?

அதையும் விட முக்கியமானது என்னவென்றால், ஒரு 'சான்ஸ்' (chance) எடுத்துக் கொள்ளும் துணிவு, மற்றும், எதுவும் சரிபட்டு வரவில்லையென்றாலும் பரவாயில்லை.. முயற்சி செய்யாமல் வந்த தோல்வி என்று இல்லாத நிலை.

அதுதான் முக்கியம்.

சரி.. இப்போது, நீங்கள், பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருக்கிற ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்..பல புது அறிமுகங்கள், மீடியாவின் கவனம், பல விருதுகள், பல தொழில் நுட்ப குழுக்களில் முக்கிய உறுப்பினர் என்கிற அந்தஸ்து, இவையெல்லாம் இருக்கிறபோது, இவை என்னவிதமான மாற்றங்களை உங்களிடத்தில் உணர்ந்திருக்கிறீர்கள்.

உண்மையாக, பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. இன்னமும், என்னுடைய நண்பர்குழுவிலோ, நான் செல்லும் உணவு விடுதிகளிலோ, வாழ்க்கை முறையிலோ, மாற்றமில்லை, இப்போது, என்னுடைய நண்பர்களின் வட்டம், சற்று பெரிதாகி இருக்கிறது. பல புதிய அறிமுகங்கள், தொடர்புகள் ஏற்பட்டுள்ளதும் உண்மை, இதையெல்லாம், பெரிய சாதனையாக எடுத்துக்கொண்டு, உண்மையிலேயே ஏதோ நான் 'பெரிய ஆள்' என்கிற எண்ணம் வந்துவிடவில்லை, வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்கள், வந்து போகக்கூடியவை. ஏற்றத்தாழ்வுகள் சகஜம். எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால், செய்யும் தொழிலைச் சந்தோஷமாக் செய்யக்கற்றுக் கொண்டுவிட்டால், அதுதான் முக்கியம். புதிய தொழில் முயற்சிகளும், அதில் 'ரிஸ்க்' (risk) எடுத்துக்கொள்ளுதலும், அடுத்தவர்களுக்கு உதவுதலும்தான், எனக்கு சந்தோஷத்தைத் தரக்கூடியவை. மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.ஆரம்பநாட்களிலிருந்தே, இதுதான் என்னுடைய சித்தாந்தம், கோட்பாடு எல்லாம்!

இந்த மனப்பான்மை உங்களுக்கு, உங்கள் பள்ளிநாட்களிலேயே இருந்ததா?.. இல்லை, வாழ்க்கை அனுபவங்களினால் உருவானதா..?

அடிப்படையில், நான் படித்த பள்ளியாகட்டும் (ராமகிருஷ்ணா மிஷன்), கல்லூரிகளாகட்டும் (விவேகானந்தா, எம்.ஐ.டி), மிகவும், 'மாடஸ்ட்', மிதமான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தவை.. நான் 'ஸில்வர் ஸ்பூனோடு' பிறக்கவும் இல்லை, என்னைக் காரில் கொண்டுவிட்டு, கூட்டிவந்த சூழ்நிலையிலும் நான் வளரவில்லை. பல, நடுத்தர வர்க்கத்தவரைப் போல, நானும் ஒரு 'ஸர்வைவர்' (survivor), கடினமான சூழ்நிலைகளில் வளர்ந்தவன், அவற்றை விரும்புகிறவன். அவை, கட்டாயமாக, உத்வேகத்தையும், சக்தியையும், உறுதிப்பாட்டையும் கொடுக்கின்றன,

உங்களுடைய வளர்ச்சி, உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர் களிடையேயும் எந்தவித மாற்றங்களை தோற்றுவித்திருக்கிறது, அவர்களுடைய கோணத்திலிருந்து..? நீங்கள் அதைப் பற்றி அவர்களிடம் கேட்டதுண்டா..?

மறுபடியும், நான் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக நினைத்தால் மட்டுமே அது தேவையில்லையா..? வெள்ளிக்கிழமைகளில், என்னுடைய பழைய நண்பர்களைத்தான் சந்திக்கிறேன். நாங்கள், பழையமாதிரியேதான் 'பாட்லக் டின்னர்' சாப்பிடுகிறோம், இரவு ஒரு மணிவரை படம் பார்க்கிறோம்..' எதிலுமே மாற்றமில்லை..! எனக்கும், என் குடும்பத்துக்கும் அல்லது நண்பர்களிடையேயும், ஒரு திரை விழுந்துவிடாதபடி, இயல்பாக, எப்போதும் போல என்னாலும் இருக்க முடிகிறது, அவர்களாலும் அதை உணரமுடிகிறது.. நீங்களும் கூட என்னை கல்லூரி நாட்களிலிருந்து அறிவீர்கள்.. (எம்.ஐ.டி, நாட்களிலிருந்து!). என்னிடத்தில், பெரிதாக மாற்றம் உண்டா, பழகும் விதத்தில்..

கட்டாயம் இல்லைச் சந்த்ரா, உன்னுடைய பக்கத்திலிருந்து.. அதே உற்சாகமான நட்போடு கலந்த பேச்சு அப்படியே இருக்கிறது... சரி. உங்களுடைய, தற்போதைய புது முயற்சி 'ஜாம் கிராக்கர்' (jam cracker), உருவான பின்னணியென்ன..?.

இந்த கம்பெனி ஜீலை 1999'ல் ஆரம்ப்பிக்கப்பட்டது. என்னுடைய முதல் கம்பெனியான 'எக்ஸோடஸ¥க்கு' எல்லன் ஹேன்காக்-ஐ ஸி.ஈ.ஓ (CEO) ஆக 1998-ன் இறுதியில் கொண்டு வந்தேன். அவர்கள் ஒர் அதி திறமைசாலி. அதே சமயம் என்னுள் இருக்கும், புதிய முயற்சியை தொடங்கி, அதில் உள்ள சவால்களை சந்திக்கும் மனப்பான்மை, மற்றுமொருமுறையும் என்னைத்தூண்டி இழுத்தது. அதேசமயம், ஸ்டான்·போர்டைச் (Stanford) சேர்ந்த எரால் சென், மார்க் ட்ரிபீக் என்னும், இருவரோடு சேர்ந்து, இண்டெர்நெட் கட்டமைப்பை (infrastructure), மின்சாரம், டிவி போல பொதுவாக கிடைக்கக் கூடிய 'யுடிலிடி' விஷயமாக்கிவிட்டோம், எக்ஸோடஸில்! பரவலாக, பல கம்பெனிகளில், தேவைப்படும், ஐ.டி, செர்விஸஸ் (IT services) களை, இதுபோல 'யுடிலிடி' ஆக்கமுடியுமா என்று சிந்தித்தோம்.' 'ஜாம் கிராக்கர்' பிறந்தது. இந்த எண்ணத்தைச் செயலாக்கத் தொடங்கியபோது, இதற்கு, நல்ல வரவேற்பு இருப்பது தெரிந்தது. இன்று, கம்பெனி நல்லமுறையிலே இயங்கி வருகிறது.

நல்லது சந்த்ரா. உங்களுடைய மற்ற ஆர்வங்களைப் பற்றி..?

நான் பல விஷயங்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். குறிப்பாக என்னுடைய முதல் ஈடுபாடு, ஆர்வமெல்லாம், அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து, எம்.ஐ.டி, கேம்பஸ¥க்குள்ளாக, அமைக்கப்பட்டிருக்கும், இண்டெர்நெட் தொழில் நுட்ப ஆய்வு மையம்தான். 1999-ன் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மையம், இப்பொழுது, 60-க்கும் மேற்பட்ட, ஆய்வு பட்டதாரிகளை கொண்டுள்ளது. தவிர, அமெரிக்க பல்கலைக் கழகங்களிலிருந்து, 10-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களை வருடந்தோரும், தருவித்து, தற்போதைய தொழில் நுட்பங்களில், எதிர்கால தொழில் வல்லுனர்களை உருவாக்கி வருகிறது. இது, சொந்தமுறையிலே மிகவும் எனக்கு மன நிறைவைத் தரக்கூடிய விஷயம்.

சந்த்ரா, இங்கிருந்து, எங்கே உங்கள் இலக்கு..?

இது ஒரு தொடக்கம்தான்.. பல இலாப நோக்கு இல்லாத விஷயங்களிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இங்கு மட்டுமல்ல, இந்தியா மற்றும், பல நாடுகளில். இந்திய அரசாங்கத்தோடு, பலவித தொழில் வளர்ச்சிக்கான சட்ட மாற்றங்களைக் கொண்டுவர, முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தவிர, டெக்னாலஜி இங்குபேட்டர் என்று சொல்லக்கூடிய, ஒர் அமைப்பின் வாயிலாக, பல வளரும் கம்பெனிகளுக்கும், தகுதிவாய்ந்த தொழில் வல்லுநர்களுக்கும், அவர்களது, கனவுகளை நினைவாக்க உதவுகிறோம்.

சந்த்ரா, சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், "இந்தியா, புது பொருளாதாரச் சூழலில், முன்னணியில் வருவதற்கு, பல தடைகளைக், அதாவது, மெத்தனமான அரசாங்கம், மற்றும், மிகவும் குறைந்த அளவே உள்ள கட்டமைப்பு, போன்றவற்றைக் கடக்கவேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளீர்கள். இந்திய அரசாங்கத்தோடு, மிகவும் நெருக்கமாக, பல மாற்றங்களை கொண்டுவர முயற்சி செய்திருக்கும் நீங்கள், இதை இப்போதும் உறுதியாக நம்புகிறீர்களா..?

இதைச் சொல்வதினால், அரசாங்கம் மோசமானது என்று சொல்லவில்லை. அடிப்படையான, சிந்தனை, மற்றும் செயல்பாடுகளில், எல்லா மட்டத்திலும், மாற்றம் வேண்டும்.. Entreprenuership என்பதே, கடந்த இரண்டு வருடங்களாகத்தான், பெருமளவில் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயமாகியிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்றால், நம்மைப் போன்ற, அந்நிய மண்ணில் வந்து, ஓரளவுக்கு, வெற்றிகரமாக இருப்பவர்கள், திரும்பிச் சென்று, எடுத்துச் சொல்லும் போது,அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது.

இந்திய அரசாங்கத்தோடு சேர்ந்து இயங்கும் போது, கட்டாயம் அரசு மேல்மட்ட ஊழியர்களுடன் வேலைச் செய்ய வேண்டியிருக்குமே.. இவர்களில், பலர், வருடக்கணக்காக அவரவர் பணியில் ஊறியிருப்பவர்கள்.. அரசாங்கத்தின் சிந்தனை மாறினாலும், இவர்கள் மாறவேண்டுமே..! அது நடந்திருக்கிறதா..?

கட்டாயமாக, அவர்களும், சுற்றுப்புறத்தைப் பார்த்து, மாற்றங்களுக்கு பழகிக் கொண்டிருக்கிறார்கள்,

சந்த்ரா, உங்களுக்கு முன்மாதிரியாக அதாவது, 'ரோல் மாடலாக' யாரைக் கருதுகிறீர்கள்...?

வால் மார்ட், நிறுவனர் 'ஸாம் வால்டன்' தான்.!

சந்த்ரா, ஒருவருடைய வெற்றிக்கு, அதிர்ஷ்டம் ஓரளவுக்கு காரணம் என்று நம்புவதுண்டா..?

நிச்சயமாக..! ஆனால், அதிர்ஷ்டம் மட்டுமே காரணமாக முடியாது.. கீதையில் சொல்லியிருப்பது போல, 'கடமையைச் செய், மற்றவற்றைக் கடவுளின் பொறுப்பில் விட்டுவிடு'.. ஒன்று சரியாக நடக்காமல் போவதற்கு, ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம், ஆனால், சரியாக நடப்பதற்கு, ஒரு காரணம் உண்டல்லவா..? அதாவது, ஏதோ ஒன்று, சரியான சமயத்தில், சரியான இடத்தில் நடந்திருக்கிறது.. அதைத்தான் அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும்.

சந்த்ரா, தென்றல் வாசகர்களுக்கான 'ஸ்பெஷல் மெஸேஜ்' ஏதாவது உண்டா..?

தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், 'lacking in entreprenurial spirit' என்னும் இமேஜ் மாறிவருகிறது, நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போது இருக்கும், எதையும் சாதிக்கக் கூடிய சூழ்நிலையைப்போல், எப்போதும் இருந்ததில்லை, முதல் அடியை எடுத்து வைக்க தயங்கவேண்டாம்.. முயற்சியில்லாமல் வெற்றியில்லை..!

நன்றி சந்த்ரா..! உங்களுடைய பல வேலைகளுக்கிடையே, தென்றல் வாசகர்களோடு, உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டது குறித்து, மிகவும் மகிழ்ச்சி..!

© TamilOnline.com