மீண்டும் பர்னாலா!
கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போது தமிழக ஆளுநராக இருந்த ராம்மோகன்ராவ் பதவி விலகியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் ஆளுநராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சுர்ஜித்சிங் பர்னாலா.

அன்றைய தினம் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கும், மத்திய அரசிற்கும் ஆளுநர் மாற்றல் தொடர்பாக கருத்துமோதல்கள் ஏற்பட்டது. மாநில அரசை கலந்தாலோசிக்காமல் ஆளுநரை மத்திய அரசு மாற்றியது தவறு என்று மத்திய அரசின் மீது ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு ஒன்றையும் தொடர்ந்தது.

இந்நிலையில் திடீரென்று தன்னுடைய பதவிகாலம் முடிவடைவதற்குள் ராம்மோகன்ராவ் பதவி விலகியதைத் தொடர்ந்து சுர்ஜித்சிங் பர்னாலா தற்காலிகமாக தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவரது பதவி காலம் முடிவடையும் நிலையில் அவரே தொடர்ந்து தமிழக ஆளுநராக இருக்க வேண்டும் என்பதில் தி.மு.க தலைமையிலான தமிழக அரசு விரும்பியதாக தெரிகிறது. இதன் விளைவாக தமிழக ஆளுநராக சுர்ஜித்சிங் பர்னாலா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.

ஏற்கெனவே கடந்த 1990ல் தமிழக ஆளுநராக பர்னாலா பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மத்தியில் ஆண்ட சந்திரசேகர் தலைமையிலான அரசு தமிழக அரசை கலைக்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com