தென்றல் மாத இதழ் - ஓர் அறிமுகம்
கடல் கடந்து வந்து கண்ணில் ஆயிரம் மில்லியன் டாலர் கனவுகளைத் தேக்கிக் கொண்டு, கணினி, கல்வி, கலையுள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் தனி முத்திரைப் பதித்து, சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும், வாழ வந்திருக்கும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் சார்பில், கோடை நீங்கி, குளிர்ச்சி பெற, வீச இருக்கும் தமிழ்த் தென்றல்’ மாத இதழினைப் படைத்து, அறிமுகப்படுத்துவதில், எங்கள் ஆசிரியக்குழு மகிழ்ச்சி கொள்கிறது.

எல்லோரும் இணைந்து, இணையப்புரட்சியை உண்டாக்கிக் கொண்டிருக்கும் இந்ந்நாளில், ஏனிந்த பழந்தொழில் முயற்சி எனுங்கேள்வி எழுவது இயற்கை! உண்மையைச் சொல்லுங்கள். புதுமையையும், இளமையையும் இனிமையாக வரவேற்கும் நேரத்தில், பழமையையும் பாரம்பரியத்தையும், ஒரேயடியாக விட்டுத் தள்ளிவிட முடியுமா?

எலியை நகர்த்திப் படிப்பதும், ஏட்டைப் பிரித்தும், புரட்டியும் படிப்பதும் ஒன்றாகுமா? புதுமையும், பழமையும் இணைந்து உருவான முயற்சிதான் இது. அது எப்படி என்கிற கேள்வியா? இணையத்தமிழர்களின் இதையங்களைப் பிணைப்பித்து, தரமான தமிழ் இதழென பெரும்பாலோராலும் அங்கீகரிக்கப் பட்டு, இணையப்பதிப்பாய் ஈராண்டுகளாய் வெளிவந்து கொண்டிருக்கும், ‘ஆறாம் திணை’ இணைய இதழ், மற்றும் ‘சென்னை ஆன்லைன்’, நம் வளைகுடாப் பகுதி தோட்டத்தின் மற்று மொரு விளைச்சலான, ‘ஸ’லிக்கனீர்’ நிறுவனங்களின், தொகுப்பு உதவியுடன் வெளிவரும் இதழ்தான் தென்றல்’.

தென்றலை, யாரேனும் விலை கொடுத்து வாங்குவார்களா? அப்பெயரைத் தாங்கி வரும் இவ்விதழும், அவ்விதிக்கு விலக்கேயல்ல! உங்கள் அபிமான பலசரக்கு கடைகள், சிற்றுண்டியகங்கள், மற்றும் வீடியோ கடைகளின் வாயிலாக, உங்களைத் தேடி வரப்போகிறது, இத்தமிழ்த்தென்றல் - அதுவும் இலவசமாக..!

இவ்விதழ் தமிழக, தேசிய மற்றும் அமெரிக்க மாதாந்திர முக்கிய செய்தி நிகழ்வுகளின் தொகுப்பு, கவிதைகள், பழமொழி, தமிழ் அறிவோம், குறுக்கெழுத்துப் புதிர், நேர் காணல், கைப்பக்குவம், சிறுகதைகள், குறுந் தொடர்கள், மற்றும் நமது புகுந்த மண்ணின் மாதாந்திர நிகழ்சிகளின் நிரல் தொகுப்பு போன்ற பகுதிகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும்.

இம்முதல் முயற்சி, முழு வெற்றியாக எல்லாம்வல்ல இறைவன வேண்டுகிறோம். அதே சமயம், வாசகர் தீர்ப்பே, வாகீசன் தீர்ப்பு என்பதையும் உணர்ந்திருப்பதால், உங்களின் ஏகோபித்த ஆதரவையும் நாடுகிறோம்.

உங்கள் கருத்துகளையும், கற்பனைப் படைப்புகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

தென்றலை உங்களிடம் கொண்டுவர, திரைக்குப் பின் இயங்கும் ஒரு பெரிய குழுவே உள்ளது. அவர்களுக்கு, தென்றலின் பதிப்பாளர் திரு. C.K. வெங்கட்ராமன் அவர்கள் சார்பிலும், அடியேன் சார்பிலும், நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக, ஆறாம் திணையின் ஆசிரியர் திரு. அப்பண சாமி அவர்கள் தொகுப்பாசிரியராகவும், “Siliconeer” பதிப்பாளர், திரு. அமர்குப்தா தொழில்நுட்ப ஆலோசகராகவும் அளித்து வரும், உதவிகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை,

ஆசிரியக்குழுவின் சார்பாக,

பதிப்பாசிரியர்

அஷோக் சுப்ரமணியம்
கலிஃபோர்னியா, டிசம்பர், 2000

© TamilOnline.com