ஹைக்கூ கவிதைகள்
மாலைக்குள் கட்டினோம்
மலர்செண்டில் அடைத்தோம்
புன்னகை மாறாமல் பூக்கள்.

சில்லு பாண்டி ஆட்டத்தில்
எதிர் வீட்டு பெண்.
உதிரவில்லை பாவாடைப் பூக்கள்.

சேரிக்குள் செண்ட் மணம்
வந்து கொண்டிருக்கிறார்
வேட்பாளர்.

கடலின் பற்களா
கரை ஒதுங்கியது.
கிளிஞ்சல்கள்.

வழி எங்கும் முட்களாய்
நட்சத்திரங்கள்
நின்று தடுமாறும் நிலா.

ஒன்றல்ல நிலா
ஒவ்வொரு குளத்துக்கும்
ஒன்று.

புள்ளிகளை சிறை பிடித்த
பூரிப்பில்
புன்னகைக்கிறது கோலம்.

சுந்தரமூர்த்தி

© TamilOnline.com