ஆரம்பப் படிகள்
'பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப் படிகள் எவையென்றால் :-

  • பெண்கள் ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
  • அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
  • விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக்கூடாது.
  • பிதுரார்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் கொடுக்க வேண்டும்.
  • புருஷன் இறந்த பின்பு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.
  • விவாகமே இல்லாமல், தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்த்ரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
  • பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷனுடன் பேசக்கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விட வேண்டும்.
  • பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
  • தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
  • தமிழ்நாட்டில் ஆண் மக்களுக்கே ராஜரிகச் சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பலனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கு ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.


'மகாகவி பாரதியார் கட்டுரைகள்' நூலிலிருந்து...

© TamilOnline.com