அரிசி வடாம்
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 3 ஆழாக்கு
ஜவ்வரிசி - அரை ஆழாக்கு
எலுமிச்சம் பழம் - 1
உப்பு - கால் கரண்டி
பச்சை மிளகாய் - 10

செய்முறை

பச்சரிசி ஜவ்வரிசி இரண்டையும் சுமார் 4 மணி நேரம் ஊற வைத்து களைந்து கிரைண்டரில் வழவழப்பாக அரைத்து எடுக்கவும்.

இதற்கிடையில் உப்பு, மிளகாய் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

மிளகாய் நன்றாக மசியட்டும்.

கிரைண்டரில் அரைத்த விழுதை தோசை மாவு பதத்துக்கு தண்ணீர்விட்டு கரைத்துக் கொள்ளவும்.

அடிகனமாக பாத்திரத்தில் மாவு விழுதை போட்டு நிதானமாக அடுப்பை எரியவிடவும்.

நிதானமாக கிளறவும்... கொஞ்சம் கூட விடாமல் பக்குவமாக மேலிருந்து கீழே, கீழிருந்து மேலே என்று கிளறவும். சுமார் 10 நிமிடங்கள் கிளறியவுடன் மாவு நன்றாக வெந்து சேர்ந்துவரும்.

மாவை கீழே இறக்கி கனமான மூடி கொண்டு மூடவும்.

1 மணிநேரம் கழித்து உப்பு, மிளகாய் விழுது, எலுமிச்சம் பழச்சாறு இவற்றை விட்டு கையால் நன்றாக பிசையவும்.

சிறு உருண்டைகளாக உருட்டி நாடா அச்சில் போட்டு பிளாஸ்டிக் பேப்பரில் பிழியவும்.

மாவு கையில் ஓட்டாமல் இருக்க தண்ணீர் தொட்டு கொள்ளலாம்.

3 நாள் நல்ல வெயிலில் காய வேண்டும்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com