அக்டோபர் 2001 : வாசகர் கடிதம்
'சக தமிழர்களிடையே தமிழிலேயே பேசுங்கள்' என்று அறிக்கை விட்டு, தமிழர்களைத் தமிழில் பேசவைத்து, எப்படியாவது தமிழை வளர்த்தி விட வேண்டும்! என்று பெருமுயற்சி செய்து வரும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில், தரமான தாள்களில், தெளிவான அச்சுக்களில், வளமான தமிழை, வளநாடாம் அமெரிக்காவில் 'தென்றலாக' உலா வரச் செய்து வரும் தங்கள் உயரிய தமிழ்ச்சேவைக்கு எம் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

சென்னிமலை. பி. சண்முகம்,
நியூயார்க்.

******


செப்டம்பர் மாத 'தென்றல்' இதழ் படித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பிரம்மாண்டாமாக தயாராகி வரும் காஞ்சி மகா சுவாமிகளின் 'மணி மண்டபம்' பற்றி மிகவும் அருமையாக ஜானகி அவர்கள் எழுதி உள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. மணி மண்டபம் நாளடைவில் மிகவும் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டு நம் பாரத தேசத்திற்கே பெயரும், புகழும் அளிக்கக் கூடிய விதத்தில் அமையும் என்பதில் ஐயமே இல்லை.

அமெரிக்காவில் வாழும் ஆஸ்திக அன்பர்கள் அனைவரும், அவரவர் சக்திக்கு ஏற்ப, இந்த 'மணி மண்டபம்' கட்டுவதற்கு, தங்களால் இயன்ற நிதி உதவி செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் பெங்களூரிலும், தற்சமயம் விடுமுறைக்கு வந்துள்ள இங்கும், என்னால் இயன்றவரை சிறுகச் சிறுக மணி மண்டபத்திற்காக நிதிதிரட்டி, ட்ரஸ்டி உறுப்பினர் ஸ்ரீ ஆத்மநாதன் அவர்களுக்கு, அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறேன்.

அனுப்பும் தொகை சிறிதளவேயானாலும், கிடைக்கும் மனநிறைவு அளவிடமுடியாதது. ஸ்ரீ காஞ்சி முனிவரின் அருளும், ஆசியும் அன்பருக்கு நிச்சயம். நிதி உதவி செய்யமுடிந்த அன்பர்கள், முடிந்த அளவுக்கு, தயவுசெய்து, கீழ்கண்ட முகவரிக்கு, தங்கள் விலாசத்துடன் அனுப்பக் கோருகிறேன். உடன் ரசீது அனுப்பப்படும்.

Mrs. Lalitha Swaminathan, C/o S.Murali Krishna Swaminathan,
695 Harvard Avenue Santa Clara CA 95051

******


தென்றல் இதழைத் தொடர்ந்து வாசித்து வரும் ஆயிரக்கணக்கான வாசகர்களுள் நானும் ஒருவன். தங்களின் தமிழ் மொழிச் சேவைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபாகர்,
சேன் ஜோஸ், கலிபோர்னியா.

******


தாய் மொழியாம் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்யும் தங்களின் முயற்சிகளுக்கு எனது நன்றி.

தில்லை கலியபெருமாள்,
சேன் ஜோஸ், கலிபோர்னியா.

******


இந்தியாவிலிருந்து வந்திருக்கும் நாங்கள், இங்கு 'தென்றல்' இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ஆனந்த அதிர்ச்சி அடைந்தோம். இதழின் வடிவமைப்பும், இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தரமும் மிக உயர்தரம். சூடான தமிழக அரசியல் செய்திகளைப் படிக்கும் போது, தாய்நாட்டில் இருப்பது போன்றே உணர்ந்தோம். நன்றி.

திரு & திருமதி. ரங்கநாதன்,
சன்னிவேல், கலிபோர்னியா.

******


நான் சோழவள நாட்டில் தஞ்சையில் தோன்றிய காவிரிக்கரை தமிழச்சி, கரந்தை தமிழ்ச் சங்க நிறுவனர் தமிழ்வேள் T.V. உமாமகேசுவனாரின் பெயர்த்தி. தமிழே மூச்சு. குறளும் ஒளவையும் நான் வணங்கும் வழிகாட்டிகள். 81 வயது.

பிள்ளைகள் இந்நாட்டில் இருப்பதால் நாங்கள் இங்கு வாழுகின்ற கட்டாயம். காரணம் முதுமை உடல் நலிவு.

தென்றலில் என்னை திரும்பிக் காணச் செய்த பகுதி. கலைஞர்களின் நல்ல பகுதிகளை மற்றவர் களும் கண்டு பாராட்டச் செய்தது.

நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும். நடிகர் திலகம் செவாலியே சிவாஜி, இசை அரசி (சக்கரவர்த்தினி) மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய Dr. M.S.S. , நாட்டியப் பேரொளி பத்மினி ராமச்சந்திரன் இவர்களைப் பற்றிய பாராட்டுக்குரிய செய்திகளை வெளியிட்டதாகும்.

தமிழை வளர்க்க, இளைய சமுதாயம் தமிழைக் கற்க முயற்சி எடுத்திருக்கின்றீர்கள். நல்ல முயற்சி. இதை இங்கு வந்து 1/4 நூற்றாண்டு காலமாக அனைவருக்கும் வீட்டில் பிள்ளைகளிடம் தமிழில் பேசுங்கள் என்று காணும் தமிழரிடம் எல்லாம் கூறி வருகிறேன். பயனில்லை. உங்கள் தென்றல் அவர்கட்கு தமிழில் தாலாட்டுப் பாடட்டும்.

நல்ல வடிவமைக்கப்பட்ட உயர்ந்த தாளில் உயர்ந்த விஷயங்களைக் கூறும் உங்கட்கு முதியவனின் தமிழ் வழி வந்த எனது பாராட்டுகள். வாழ்க நீவிர். நீங்கள் துவங்கிய தென்றல் சூறாவளியாக மாறாமல் என்றும் தென்றலாகவே இருக்க என் பேரவா.

தள்ளாத நிலையில் தென்றலை அனுபவித்த நான் எனக்குத் தோன்றிய கருத்துகளைக் கூறியுள்ளேன். இலவசமாக இதனை வழங்குவதற்கு மனமும் வசதியும் வேண்டும். அது வளர்க.

D. ஜெயகாந்தம், நியூயார்க்

******


தென்றல் பத்திரிக்கை செவ்வனே வளர்வதில் மிக்கப் பெருமை தமிழகத்திலிருந்து வெளிவரும் வெகுஜனப் பத்திரிகைகளைப் போல் தேவையற்று ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் சொல்லாமல் 'தென்றல்' வீசுவது ஒன்றே நிறைவைத் தருகிறது.

கோம்ஸ் கணபதி

******


தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் 'தென்றல்' இதழை வெகுவாக ரசித்துப் படித்தேன். தமிழின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்களை, சென்னைக்கு வெளியேதான் சந்திக்க முடியும் என நான் கருதுகிறேன். நாம் இழந்து நிற்பதன் அருமை நமக்குத்தானே நன்கு தெரியும். தென்றல் இதழின் வெற்றிக்குப் பின் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அனைத்துப் பகுதிகளுமே அருமையாக உள்ளன. ஆகஸ்ட் இதழில் இடம்பெற்ற பிரபாகரன் சுந்தரராஜன் அவர்களுடனான நேர்காணல் எனை வெகுவாய்க் கவர்ந்தது, நன்றி.

சீதாராமன் பாலச்சந்திரன், சேன் ஜோஸ், கலி·போர்னியா

© TamilOnline.com