கமல் நடித்து வெளிவரும் 20- ஆவது இரட்டை வேடப்படம் 'ஆளவந்தான்'.
20/200

'இரு நிலவுகள்', 'சட்டம் என் கையில்', 'அபூர்வ சகோதரர்கள்', 'கல்யாணராமன்', 'மைக்கேல் மதன காமராசன்' (4 வேடம்), 'இந்திரன் சந்திரன்', 'ஒரு கைதியின் டைரி' உள்ளிட்ட அனைத்துப் படங்களும் வெற்றி பெற்ற படங்கள். சினிமா செண்டிமெண்டுகளை நம்பாத கமல்ஹாசனுக்கு அவர் விருப்பம் இல்லாம லேயே நிகழ்ந்துவிட்ட விபத்து (!) இது.

உலக இலக்கியங்களிலும் பொழுது போக்கு அம்சக் கதைகளிலும் இரட்டை வேடம் முக்கியப் பங்கு வகித்திருப்பதாக கூறும் இப்பட நிர்வாகத்தார், இன்னும் அயர்ச்சி தராத ரசிப்புத் தன்மையின் களமாக இரட்டை வேடப் படங்கள் இருப்பதாக நம்பிக்கையும் தெரிவித்திருக் கிறார்கள்.

கமல் 20 ஆண்டுகளுக்கு முன் இதயம் வார இதழில் எழுதிய 'தாயம்' கதை இது. மன நிலை பாதிக்கப்பட்ட அண்ணனுக்கும் ராணுவத்தில் பணிபுரியும் தம்பிக்கும் நேரும் சவாலான சம்பவத் தொகுப்பு இது. ஏறத்தாழ ஸ்டீபன் ஹாகின்ஸ் நடித்து வெளியாகி ஏகப்பட்ட ஆஸ்கார் அவார்டு வாங்கிய 'சைலன்ஸ் ஆ·ப் லேம்ப்ஸ்' படத்தின் கதையை நினைவு படுத்துவதாக இது இருந்தாலும் கமல் அதை காப்பியடித்துவிட்டதாகக் கூற முடியாது. ஏனென்றால் 'சைலன்ஸ் ஆ·ப் லேம்ப்ஸ்' படம் வெளியாவதற்கு முன்னரே கமல் 'தாயம்' கதையை எழுதிவிட்டார். (அந்தப் படத்தின் கதை எழுதிய தாமஸ் ஹாரீஸ் 'தாயம்' கதையைக் காப்பியடித்திருப்பாரோ?)

மனநிலை பாதிக்கப்பட்டவரான நந்தகுமார் தனது 12 -ஆவது வயதில் செய்த குற்றத்துக்காக 22 ஆண்டுகளாக ஜெயில் வாசம் அனுபவித்து வருகிறார். அவரை வெளியே அனுப்புவதன் மூலம் நாடு பல சிரமங்களைச் சந்திக்க நேரும் என்பதால் அவரை ரிலிஸ் செய்யவே முடியாது என்று மறுக்கிறது ஜெயில் நிர்வாகம். இந் நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் தம்பி கமல்ஹாசனுக்கும் ஸ்டார் டிவியில் பணிபுரியும் ரவீணா டாண்டனுக்கும் காதல் மலர்ந்து திருமணமாகிறது. குடும்பத்தின் புதிய நபர்களால் அண்ணன் கமல்ஹாசனின் கொடூரத்தை உணரமுடியாமல் போக, ஜெயிலில் இருக்கும் அவர் மீது பரிதாப உணர்வு ஏற்படுகிறது. அவரை வெளியே கொண்டுவர பிரயாசைபடுகிறார்கள். அப்போது புதிய விபரீதத்தையும் ஆபத்தையும் அடைகிறார்கள்.

'கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்' -என்கிறார் சிறைவாசத்தில் இருந்து வெளியான அண்ணன் கமல். நாடு ஒரு ரத்தக் குளியலுக்கு ஆட்படுகிறது.

கமலுடன் ரவீனா டாண்டன், மனீஷா, மிலிந்த் குனாஜி, விக்ரம் கோகலே, அம்ரிஷ், ராஜி ஐயர், கீது கித்வானி, கிருஷ்ணபட் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இதில் கமல்ஹாசன் தவிர மற்றுமுள்ளோர் பற்றி தமிழ்நாட்டின் 5 கோடி பேரில் எத்தனை சதவீதம் பேர் அறிந்திருப் பார்கள் என்பது யோசனை ஏற்படுத்துகிறது. ஒருவேளை இந்தி மார்க்கெட்டை பெரிதும் நம்பி இந்த திட்டத்தில் இறங்கியிருக்கலாம். இந்த நடிகர்கள் இந்தியில் இவர்கள் அறிமுகமானவர்கள். ஆனால் தென்னிந்திய தயாரிப்புகள் பெரிதும் இந்தியில் போற்றப் பட்டதில்லை. பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை', மணிரத்னத்தின் 'உயிரே', ஷங்கரின் 'முதல்வன்' போன்ற பல படங்கள் தெற்கிலும் வடக்கிலும் மாறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத் தின என்பதுதான் நிஜம்.

இந்தி பட உலகில் ஒருவிதமான சினிமா ரியிலிசத் தன்மை நிலவுகிறது. 'லகான்', 'லஜ்ஜா' போன்ற ட்ரண்ட் நிலவுகிறது. 'ஆளவந்தான்' டிரண்ட் செட்டிங் படமாக இருந்தால் இப்போதிருக்கிற நிலைமையில் இருந்து பார்வையாளர்களைப் புதுப்பிக்க முடியும்.

கமலுக்கு அந்த யோசனை இருந்திருக்கக் கூடும்.

கமல் எப்போதும் ஒரு பரீட்சார்த்த படத்துக்குப் பிறகு ஒரு காமெடி படம் எடுப்பார். 'குணா' படத்துக்குப் பிறகு அவர் நடித்த படம் 'சிங்கார வேலன்', 'தேவர் மகனு'க்குப் பிறகு 'மகராசன்', 'ஹேராமு'க்குப் பிறகு 'தெனாலி' என்று பாதுகாப்பாக ஒரு படத்தில் ஒப்பந்த மாகிவிடுவார்.

அந்த வகையில் 'ஆளவந்தானு'க்குப் பிறகு 'பம்மல் கே. சம்பந்தம்'.

கமலுடைய பரீட்சார்த்தங்கள் பெரிதும் பேசப்படும் படமாக இருக்கும், சந்தேகமே இல்லாமல். ஆனால் அவருடை காமெடி படங்கள் வெற்றிப் படங்களாக இருக்கும், அது பேசப்படும் படமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

© TamilOnline.com