மாறாக கட்சி நலன் தலைவர் நலன்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் கேட்டு கடந்த 17 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கினர். தனியார் ஆம்னி, மினிபஸ் மற்றும் வேன்கள் என இயக்கி நிலைமையை சமாளிக்க அரசு முற்பட்டது.

பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையில் அரசு தரப்பும் தொழிற்சங்கங்களும் கூடியும் வேலைநிறுத்தத்தை ஓர் முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. நிதிநிலைப் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் தொழிலாளர்கள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாது. 8.33 சதவிகித போனஸ் மட்டுமே தர முடியும் என்று அரசு கூறிவந்தது. தொழிலாளர்கள் 20 சதவிகித போனஸ் தராதவரை வேலைக்கு திரும்ப மாட்டோம். வேலைநிறுத்தம் வாபஸ் பெறப் படமாட்டாது எனக் கூறி வந்தனர்.

வேலைநிறுத்தம் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக மோசமாக பாதித்துள்ளது. பயிற்றப்படாத தொழிலாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டமையால் மோசமான விபத்துகள், உயிர்கள் பலியாக்கப்பட்டமையும் நடந்தமை வேதனைக்குரியது.

எவ்வாறாயினும் வேலைநிறுத்தத்தை ஒர் முடிவுக்க கொண்டு வராமல் இருதரப்பும் முரண்டு பிடித்தமையால் மக்கள் சொல்லயிலா துயரங்களை அனுபவித்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.

கடந்த மே மாதம் ஜெயலலிதா தலைமை யிலான அமைச்சரவை பதவியேற்ற பின்னர் இருமுறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. பதவியேற்ற 22 நாளில் அய்யாறு வாண்டையார், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அமைச் சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக ஆர். வைத்தியலிங்கம், ஆர். ஜீவானந்தம், சி. சண்முகவேலு ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அத்துடன் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன.

அடுத்த அமைச்சரவையிலிருந்து ஆலங்குடி வெங்கடாசலம் நீக்கப்பட்டார். இவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற 22 நாள்களில் இவரது துறை மாற்றப்பட்டது. மீண்டும் 18 நாள்களில் அமைச்சரவையிலிருந்து இவர் நீக்கப்பட்டார். இது இரண்டாவது முறையாக செய்யப்பட்ட மாற்றமாகும். இவருக்குப் பதிலாக வளர்மதி ஜெபராஜ் அமைச்சராக நியமிக்கப் பட்டார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி முதல்வர் பதவி யிலிருந்து ஜெயலலிதா விலகினார். அவருக்குப் பதிலாக ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். அப்போது ஜெயலலிதா அமைச் சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் மீண்டும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் செல்வராஜ் மட்டும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக செ.ம. வேலுசாமி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் மூன்றாவது முறை அமைச்சரவையே மாறியது. இப்போது நான்காவது முறையாக வளர்மதி ஜெபராஜ் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 152 நாள்கள் பதவியில் இருந்துள்ளார்.

அதிமுக கட்சி அமைப்பிலும் பலர் பதவியில் இருந்து இறக்கப்படுகின்றனர். அமைச் சரவையிலிருந்து இன்னும் சிலர் நீக்கப் படுவார்கள் என்னும் எதிர்பார்ப்பு வலுப் பெற்றுள்ளது. அதிமுக காங்கிரசுடன் கொண்டி ருந்த உறவுக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு விட்டது. பாஜகவுடன் மீண்டும் அதிமுக சேரும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக வலுப் பெற்று வருகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து திமுக ஓரங் கட்டப்படுமென்ற எதிர்ப்பார்ப்புக்கூட வலு வாகவே உள்ளது. திமுகவும் மாற்று நடவடிக்கை களுக்கு தயாராகி வருகிறது.

காங்கிரஸ் கட்சி தன்னைப் பலப்படுத்தும் விதத்தில் உஷாராகவே உள்ளது. காங்கிரசுடன் தமாகாவை இணைத்து விட வேண்டுமென்பதில் இளங்கோவன் உறுதியாக உள்ளார். ஆங்காங்கு தமாகா உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு தாமாக காங்கிரசில் இணைகிறது என்னும் ஓர் தோற்றப்பாட்டை உருவாக்கி வருகின்றார்.

அதிமுக கூட்டணியில் தமாகா தொடருமா? என்னும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இரு கட்சிகளுக்கிடையிலும் உரசல் தொடங்கிவிட்டது. அதிமுகவின் பாஜக பக்கச் சாய்வு தமாகாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை காங்கிரஸ் தனக்கு சாதகமாக்க விரும்புகிறது. தமிழக ராஜ்வ் காங்கிரஸ் மீண்டும் காங்கிரசில் இணைவதாக உறுதியாகிவிட்டது. கண்ணப்பன் தலைமையிலான தமிழ் தேசக்கட்சி கூட காங்கிரசில் இணைந்துவிட்டால் என்ன என்பது குறித்து ஆலோசிப்பதாகவும் தெரிகிறது.

திருநாவுக்கரசு தலைமையிலான கட்சி பாஜகவுடன் இணைவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆனால் கட்சிக்குள் எதிர்ப்பும் உள்ளது. எவ்வாறாயினும் அமைச் சரவையில் திருநாவுக்கரசு இடம் பெறுவது என்னும் குறிக்கோள் சாத்தியமாகும் என்றே தெரிகிறது.

ஆக தமிழக அரசியலில் கட்சிகளின் உறவும் தொடர்பும் இணைப்பும் புதுவேகத்துடன் அலைவீசத் தொடங்கியுள்ளன. இவை அரசியல் கொள்கை கோட்பாடு சார்ந்த முடிவுகளில் இருந்து வெளிப்படுபவை அல்ல. தமிழகத்தின் எதிர்காலம் கருதிய முடிவுகளோ அலைகளோ அல்ல. மாறாக கட்சி நலன் தலைவர் நலன் என்னும் ரீதியில் நடைபெறும் அரசியல் நகர்வுகள்தான்.

துரைமடன்

© TamilOnline.com