நாரதரின் மறு அவதாரம் - புரந்தர தாஸர்
இசையினுக்கு இசையாத இதயம் இவ்வுலகில் ஏதும் இல்லை என்பது சத்தியமான உண்மை. அதிலும் உலகத்திலுள்ள அனைத்து இசை நிபுணர்களையும், வல்லுனர்களையும் வியக்க வைக்கும் மகத்துவம் வாய்ந்தது நமது இந்திய இசையே என்பது புதிதானதோர் விஷயம் அல்ல. மேற்கத்திய மும்மூர்த்திகள் (Trinity) என்றழைக்கப்படும் பாக் (Bach) மொஸார்ட் (Mozart) பீத்தோவன் (Beethoven) புகழுடன் மேலைநாடுகளில் இசையை உருவாக்கி கொண்டிருந்த அந்த சமயத்தில் தான் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்யாமா சாஸ்திரி இந்தியாவின் தெற்கத்திய பகுதியில் இசையை உருவாக்கி உலகிற்கு வழங்கி கொண்டி ருந்தனர். அப்படிப்பட்ட மும்மூர்த்திகளுக்கே முன்னோடியானவர் புரந்தர தாஸர் எனும் பெரும் ஞானி. உலகின் இசைஞர்களையே வியப்பில் ஆழ்த்தும் தென்னிந்திய 'கர்நாடக சங்கீதத்தின் தந்தை' என்றழைக்கப்படுபவர் அவர்.

புரந்தரதாஸர் (1480-1564) ஸ்ரீ நாரதரின் மறு அவதாரம் என்றுகூட பலராலும் நம்பப்படுபவர். விஷ்ணு பரமாத்மாவின் பக்தரான இவர் ஒரு கையில் தம்புராவெனப்படும் ஸ்ருதி கருவியையும் மறுகையில் சிப்லா கட்டை எனப்படும் தாளக் கருவியையும் கொண்டு கழுத்தில் துளசி மாலையை அணிந்து உருவப்படமாகச் சித்தரிக்கப்படுபவர். ஆண்டவனிடம் முழு சரணாகதி அடைவதே மனித வாழ்க்கையின் தத்துவம் என்ற குறிக்கோளுடன் வாழ்க்கையை நடத்தியவர்.

ஊரார் அனைவராலும் மதிக்கப்பெரும் பெரு மை வாய்ந்த வைரதங்க நகை வியாபாரியான நவகோடி நாராயணன் என்ற புனைப்பெயர் பூண்ட ஸ்ரீநிவாச நாயக்கரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம், அவரை பக்தகோடி புரந்தரதாஸராக மாற்றியது. அவருக்கு வாழ்க்கையின் தத்துவமான ஆண்டவனிடம் முழு சரணாகதி எனும் மெய்மையைப் புரியவைத்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏழை பிராமணர் ஒருவர் தம் மகனின் உபநயன விழாவிற்கான (புனித முப்பிரி நூல் விழா) உதவி கேட்டு அவ்வூரிலேயே பேரும் புகழும் வாய்ந்த தங்க வைர வியாபாரியான ஸ்ரீநிவாச நாயக்கரை தேடி வந்தார். செல்வாக்கில் பெருமையும் மனிதத் தன்மையில் சிறுமையும் கொண்ட, மற்றவர்களின் நலனில் சிறிதும் நாட்டமற்ற நாயக்கர் எதற்கும் உபயோகமற்ற ஒரு உலோக நாணயத்தை வந்த பிராமணர்க்கு கொடுத்தனுப்பினார்.

கடின இயதம் கொண்டவரின் கையினின்று பெற்ற உலோக நாணயத்தை கண்டு மன முடைந்து போன அந்த பிராமணர் நேரே நாயக்கரின் வீடு நோக்கி அவரின் மனைவியார் சரஸ்வதி அம்மையாரிடம் முறையிடச் சென்றார். பெண்மைக்கே உரித்தான சிறப்பு அம்சங்களான அடக்கம், கனிவு, தாழ்மை, பணிவு கொண்ட வரும், மனிதத்துவத்திற்கே உரித்தான தர்மம், தெய்வபக்தி, பிறர் நலம் கருதுதல் என்ற சிறப்பாம்சங்கள் கொண்ட சரஸ்வதி அம்மையார் தம் கணவர் செய்த இக்கடுமையான செயலை கேட்டு மனம் நொந்தார். கணவரிடம் எதிர்த்து பேசி பிராமணர்க்கு உதவி செய்ய தைரியமின்றி மனமுருகினார். அத்தருணத்தில் தமது திருமணத்தின் போது தம் தாய்வீட்டு சீதனமாக தனக்கு அளிக்கப்பட்ட, தன் வைர மூக்குத்தி ஞாபகம் வர சற்றும் தாமதிக்காது தமது மூக்கிலே அணிந்திருந்த வைரமூக்குத்தியைக் கழற்றி மனமுவந்து அந்த பிராமணருக்குக் கொடுத்தனுப்பினார்.

'நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறையின் தீர்ப்பு' என்பதைப் பரிபூரணமாக உணர்ந்த பிராமணர் மிக்க உற்சாகத்துடன் அந்த மூக்குத்தியை விற்றுப் பணம் பெற நாயக்கரின் கடையை நோக்கிச் சென்றார். மூக்குத்தியைக் கையில் வாங்கிப் பார்த்த நாயக்கர் சற்று நேரம் உற்றுநோக்கி அது தம் மனைவியின் வைரமூக்குத்தியைப் போல் இருப்பதைக் கண்டு சந்தேகித்தார். சந்தேகமே மனித வாழ்க்கையின் முட்டுக்கட்டை என்பதை உணராத நாயக்கர் அந்த மூக்குத்தி தூய்மையான வைரம்தானா? என்று ஆராய தனக்கு நேரம் வேண்டும் என்று கூறி பிராமணரைப் பிறகு வந்து சந்திக்கச் சொன்னார். தம் வைரக் கடையிலிருந்து பிராமணர் சென்றவுடன் வைர மூக்குத்தியைக் கடையில் வைத்து மூடிவிட்டு கோபத்துடன் தமது வீடு நோக்கி சென்றார்.

தம் மனைவியின் மூக்குத்தி அவளின் மூக்கில் இல்லாததை அறிந்து மேலும் ஆத்திரமடைந்தார் நாயக்கர். மூக்குத்தி காணாமல் போனதன் காரணம் கேட்ட போது பதில் சொல்ல முடியாது திணறினார் அம்மையார். அம்மை யாரின் பயந்த சுபாவம், கண்ணீராக, கண்ணீர் பயமாக உண்மையை கூற தைரியமற்ற உதடு கள் காரணம் கூற முடியாது நடுங்கின. நாயக்கரின் மின்னல் வேகத்தில் வந்த இடிமுழக்க வார்த்தைகளுக்கு ஈடுகொடுக்க இயலாத அம்மையார் பயந்தோடி உள்ளே சென்று விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

தெய்வபக்தி வாய்ந்த சரஸ்வதி அம்மையார் குடித்த அந்த விஷமே அவர் வணங்கிய தெய்வத்தின் அருளால் ஒரு பாவமும் அறியாத அம்மையாரைக் காப்பாற்றியது. விஷம் குடிக்க உபயோகித்த அந்தக் கோப்பையில் வைர மூக்குத்தி ஒன்று பளபளக்க கிடந்தது. இதைப் பார்த்த நாயக்கர் திடுக்கிட்டார். கண்டது கனவா? நனவா? என்று நம்ப முடியாமல், கடையை நோக்கி ஓடினார் நாயக்கர். கடையில் அவர் வைத்துச் சென்ற மூக்குத்தி பத்திரமாக இருந்தது.

அத்தருணமே செல்வத்தின் சிறுமையையும் மனிதத்துவத்தின் மகத்துவத்தையும் உணர்ந் தார். ஸ்ரீ விஷ்ணு பெருமாளே அந்த ஏழை பிராமணர் உருவில் வந்து தமது நிரந்தரமற்ற செல்வத்தின் சிறுமையை உணரச் செய்ததை உணர்ந்தார். பணம், பொருள், பேர், புகழ் என்பதெல்லாம் நிரந்தரமற்ற செல்வம் இறைவன் அருளே நிரந்தரமான மானிட வாழ்க்கையின் அடிப்படை தேவை என்பதை உணர்ந்தார். அந்த நிமிடமே தான் சேர்த்து வைத்த பணம், பொருள், நகைகள் அனைத்தையும் ஏழை எளியோருக்கு பகிர்ந்தளித்து தானமாக கொடுத்துவிட்டு 'ஸ்ரீஹரி' என்னும் விஷ்ணு பரமாத்மாவின் திருப்பெயரை உள்ளத்திலும், உதட்டிலும் தரித்து ஒரு கையில் தம்புராவையும், மறுகையில் சிப்லாவையும் தாங்கி கழுத்தில் துளசி மாலையணிந்து ஸ்ரீவிஷ்ணுபிரானின் பக்தகோடிகளில் ஒருவரானார்.

தமது வாழ்க்கையின் மாற்றத்திற்கு பிறகு ஸ்ரீவியாசராயர் என்னும் பெரும் மகாஞானியின் உதவியால் சமஸ்கிருதம், கன்னடம், தெய்வீகம் மற்றும் மதசம்மந்தப்பட்ட விஷயங்களைக் கற்றறிந்தார்.

நாயக்கரின் திறமையையும், அறிவையும் கண்டு வியந்த வியாசராயர் ஸ்ரீனிவாச நாயக்கர் என்னும் இவரின் இயற்பெயரை மாற்றி 'புரந்தரவிட்டலர்' எனும் பெயரை வழங்கினார். வியாசராயரிடம் இருந்து கற்றறிந்த உண்மைகளை இந்தியா முழுவதும் சென்று பரப்பி வந்த புரந்தரவிட்டலர் இறுதியில் மகாராஷ்டிரத்தில் உள்ள பண்டரி புரத்திற்கு வந்து தமது மன¨வி குழந்தை களுடன் குடியேறினார். விஷ்ணு பெருமான் மற்றும் புண்டரிகப் பெருமானின் திருப்பெயரில் பாடல்களை இயற்றி குடும்பத்தினர் அனைவரும் பாட ஆரம்பித்தனர். புரந்தரதாஸரின் பாடல் களில் அமைந்திருந்த எளிமை, இனிமை, சந்தம், தாளம், கருத்துக்கள் இந்தியாவின் அனைத்து மாநிலத்து மக்களையும் கவர்ந்தது.

சற்றேறக்குறைய 4,75,000 பாடல்களை இயற்றி அப்பாடல் தொகுப்பிற்கு தமது மதகுருவிடமிருந்தே புரந்தர உபநிடதம் என்னும் கிடைத்தற்கரிய சிறப்புப்பட்டம் பெற்றவர் புரந்தரதாஸர்.

புரந்தரதாஸரின் பாடல்கள் கஜேந்திர மோட்சம், த்ருபத் வஸ்த்ராபரணம்,கீதை ஆகியவற்றின் சாராம்சங்களையும், உகபோகம், தேவர்நாமம், உபநிடதம் என்ற சிறப்பாம் சங்களையும் கொண்டவை. கருத்துமிக்க அவரது பாடற்தொகுப்புகள் கிருஷ்ண பரமாத்மாவின் பால்யபருவம், யசோதா அம்மை யாரின் தாய்ப்பாசம், லட்சுமி தேவியின் காதல், அன்பு, இறைபக்தி போன்ற கருத்தாம் சங்களையும் கொண்டவை.

இன்றைய தலைமுறையின் அடிப்படை பால்ய பாடங்களான வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் என்னும் பாடல்கள் இவராலேயே உருவாக்கப்பட்டது. மேலும் பல்வகையான வரிசைகளான சரளி, ஜண்டை, தாட்டு, அலங்காரங்களை மாயாமாலை கெளளை ராகத்தில் பாடவேண்டுமென அந்த ராகத்தை முதல் ராகமாக புகட்டியவர் புரந்தரதாஸரே!

ரோஸ் முரளிகிருஷ்ணன்

© TamilOnline.com