கலி·போர்னியா முத்தமிழ் சங்கம் - தமிழ் புத்தாண்டு கலைநிகழ்ச்சி
முத்தமிழும் முத்தமிடும் கலி·போர்னியா முத்தமிழ் சங்கத்தின் தமிழ்ப்புத்தாண்டு கலை நிகழ்ச்சி ஏப்ரல் 20-ஆம் நாள், லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள 'நோர்வாக்' நகரத்தில் 'சனாத்தன் தர்மா' கோயில் அரங்கத்தில் நடந்தேறியது. மாலை 5 மணிக்குத் தொடங்கி எதிர்பாராத அளவுக்கு இரசிகப்பெருமக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். முதலில் வயிற்றுக்கு உணவு. சங்கத்தின் இயல், இசை, நாடக கதம்ப நிகழ்ச்சிகள் இரசிகர்களின் வயிற்றுப் பசியை மறக்கச் செய்துவிட்டது. விழா நிகழ்ச்சிகளை மிகவும் அழகாக தொகுத்தளித்த திரு. சங்கர், திருமதி சுஜாதா சேகர் இருவரும் சபையோரின் அமோகமான பாராட்டைப் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏனைய தமிழ்ச் சங்கங்களும் வேற்றுமை கருதாமல் ஒற்றுமையுடன் பங்குபெற்று, விழாவை சிறப்பித்து குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

பாரதியார் பாடலுக்கு திருமதி. ரோஸ் முரளி கிருஷ்ணன் இசையமைத்துப் பாடியது, தேனுஷ்யா, ப்ரியங்கா விக்னேஷ்வரன் சகோதரிகள் பாடிய தமித்தாய் வாழ்த்துப்பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது.

திருமதி. உமா ராமதுரை, திருமதி. லதா சங்கர், குழுவினர் வழங்கிய பஞ்ச தந்திர நடனம், நாட்டியக் கதம்பம், மற்றும் ஒத்த ரூபா பல்சுவை நடனம் இரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.

திரு.ஹரி, திரு. பாலு குழுவினர் வழங்கிய விடியலுக்கோ, பூபாளம், ஓ பாரதா, சத்ரபதி சிவாஜி ஆகிய நிகழ்ச்சிகளை சபையோர் பலத்த கைதட்டலுடன் பாராட்டினார்கள்.

இதைத்தவிர, சண்டியோ கோ தமிழ்ச்சங்க அங்கத்தினர் வழங்கிய 'நாடகப்பிரியாவின்' 'குறும்பு' நாடக கதா காலட்சேபம், 'கலாஞ்சலி வழங்கிய கலி·போர்னியா வைபோகமே'' ஆகிய நிகழ்ச்சி களும் சபையோரின் பலத்த பாராட்டை பெற்றன.

இதைத்தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இன்னிசை விருந்து ஆரம்பமாகியது. உள்ளூர் கலைஞர்கள் திரு. பாலாஜி, திரு. முரளி, திரு. குமாரதுங்கம், திரு (கலாநிதி) வெங்கட், திருமதி. உமா, செல்விகள். ஐஷ்வர்யா, சுரபி ஆகியோர் பாடல்களை இனிமையான குரலில் பாட, இசைக்கலைஞர் திரு. ராஜ்குமார் அவர்கள் அத்தனை பாடல்களுக்கும் இரசனையோடு சலிபபின்றி பின்னணி மெட்டிசைத்து சபையோரை மெய்மறக்கப் பண்ணினார்.

பரிசுக் குலுக்கலில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வதுங்கப்பட்டன. அதன் பின்னர் கலி·போர்னியா முத்தம்ழ் சங்கத்தின் அங்கத்தவர்களின் நன்றிரையுடன் தமிழ் புத்தாண்டு விழா இனிதே நிறைவுற்றது.

சங்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

© TamilOnline.com