கணக்கிலடங்க கடிதங்களின் கதை!
விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் பயனாய் 'E' Mail என்ற பெயருடனே
வினாடி நேரக்காலத்தில் விவரமான செய்திகள்
உலகமெல்லாம் சென்றடையும் வினோதமானச் செய்கையினை
பார்த்து மிக வியப்படைந்தேன், பாராட்டத்தக்க கண்டுபிடிப்பு!

விரைவினிலே செய்தியனுப்பி, உடனே விடைபெறும் வழிகளும்
எளிதாய் முடிந்து போவதினால் உள்ளத்தை வந்து தொடுவதிலை
உதட்டின் வரையில் ருசி கொடுக்கும் திடீர் உணவு பெருட் போல
என்றது எந்தன் உள்ளுணர்வு!

ஆங்கிலேயர் வருகையினால் அறிந்து கொண்டு பயன்பெற்ற
தபால் தகவல் வழியெல்லாம் தாமதம் என்பது புரிந்தாலும்
தபாலில் வரும் கடிதங்கள் என்னைப் போன்ற உள்ளங்களுக்கு
உணர்ச்சி பொங்கும் கடலம்மா!

அழகான எழுத்துக்களில் அன்பான கடிதங்கள்
குழந்தை போன்ற எழுத்துக்களுடனே குழையும் சில கடிதங்கள்,
பழமையை எடுத்துக்கூறி நினைவில் நிற்கும் கடிதங்கள்
கணக்கிலடங்காக் கடிதங்களைக் கண்டுவிட்டேன் எந்தன் வாழ்வில்!

குறுக்கெழுத்து போட்டிபோல சுருக்கெழுத்துக் கடிதங்கள்
சொற்களின் அடுக்குகளால் சொக்க வைக்கும் கடிதங்கள்
தோழமையை எழுத்தில் கூறி நிலைக்க வைக்கும் கடிதங்கள்
கணக்கிலடங்காக் கடிதங்களைக் கண்டுவிட்டேன்எந்தன்வாழ்வில்!

பந்தங்களை, பாசங்களை எடுத்துக்கூறும் கடிதங்கள்,
புகழ்பெற்ற மனிதர்களின் பெருமை மிக்கக்கடிதங்கள்,
நகைச்சுவை எடுத்துக்கூறி சிரிக்க வைக்கும்கடிதங்கள்
கணக்கிலடங்காக் கடிதங்களைக் கண்டுவிட்டேன் எந்தன் வாழ்வில்!

படித்தவற்றை எழுத்தில்கூறி பயன் தரும் கடிதங்கள்
நன்றியுடன் உணர்ச்சி பொங்க மகிழ வைக்கும் கடிதங்கள்
கையெழுத்தைப் பழக்கிக் கொள்ள, மன இறுக்கம் தளரச் செய்து
வாழ்த்துக்களை எடுத்துச்சொல்லும் அருமையானக் கடிதங்கள்
கணகிகலடங்காக் கடிதங்களைக் கண்டுவிட்டேன் எந்தன் வாழ்வில்!

சரோஜாராவ்

© TamilOnline.com