மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
2007 ஜூலை 2ம் தேதி முதல், 23ம் தேதிவரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி அவர்கள் அயோவா, சிகாகோ, வாஷிங்டன் டி.சி., நியூயார்க், பாஸ்டன், டொரன்டோ (கனடா) ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் அடையாள மாக விளங்கும் அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் அமுத மொழிகளில் சில:

'இறைவனிடம் காட்டும் பக்தி என்பது, அனைத்து உயிரினங்களிடமும் நாம் காட்டும் அன்பாகும். இதில்லாமல், வெறும் பிரார்த்தனை மட்டும் செய்வது பக்தியல்ல. இறைவன் ஆகாயத்துக்கு அப்பால் இருப்பவரல்ல. நம் எல்லோருடைய உள்ளத்தின் உள்ளேயும் அவர் வசிக்கிறார். இந்த மனோபாவத்தை நாம் வளர்க்க வேண்டும். அதற்குப் பணிவு மிகவும் அவசியம். இதற்காக நாம் ஒரு பெரிய தியாகம் செய்ய வேண்டும் - அது அகம்பாவத் தியாகம். அகம்பாவமே அனைத்துக்கும் தடையாக இருக்கிறது. இதை துறப்பதன் மூலம் நாம் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.'

'கண்களை மூடி அமர்ந்திருப்பது மட்டுமே தியானம் என்று யாரும் கருத வேண்டாம். புன்னகை தவழும் முகம், நல்ல வார்த்தை, கருணை நிறைந்த பார்வை போன்றவையும் தியானமே ஆகும். தியானத்தின் மூலம் நம் இதயத்தில் கருணை நிறைய வேண்டும். அப்போது தான் இறைவனின் பிரகாசத்தை நமது இதயத்தில் தரிசிக்க முடியும். பிறரது துன்பங்களை அறிந்து, அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கும் மனோபாவம் நமக்கு வேண்டும்.'

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

(Amma photo copyrighted to M.A. Center, 2000)

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com