மதுரை இடைத்தேர்தல்
எதிர்பார்த்தது போலவே ஆளும் தி.மு.க. கூட்டணியின் ஆதரவோடு மதுரையில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று விட்டது. தனக்கு 2% கூட ஆதரவு இல்லை என்று ஆரூடம் கூறியவர்களின் மூக்கை உடைத்துவிட்டார் மு.க. அழகிரி. இது ஆளுங்கட்சியின் சதி என்று அ.தி.மு.க. குறை கூறி இருக்கிறது. 'என் நேர்மையை தயவு செய்து சந்தேகிக்காதீர்கள்' என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார் தமிழகத் தேர்தல் முதன்மை அதிகாரியான நரேஷ் குப்தா. இந்நிலையில் தோற்றாலும் உண்மையில் வெற்றி பெற்றிருப்பது நாங்கள்தான் என மார் தட்டுகிறது விஜயகாந்த்தின் தே.மு.தி.க. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக 'விஜயகாந்த் பெற்றிருக்கும் வாக்கு ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தது' என்று கூறியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் விஜயகாந்த்தை, முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வந்து சந்தித்து விட்டுச் சென்றிருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குத் தேர்தல் வளர்ந்து கொண்டே வரும் விஜயகாந்த்தின் செல்வாக்கு அரசியல் தலைவர்களில் சிலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com