ஆகஸ்ட் 2002 : வாசகர் கடிதம்
நான் மேமாதம் இங்கு வந்ததிலிருந்து தமிழ் மணம் கமழும் தென்றலாக வலம் வரும் மே, ஜூன், ஜூலை மாத இதழ்களை ஆவலுடன் வாசிக்கும் எனக்கு வாய்ப்பளித்த ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

'தென்றல்' ஜூலை மாத இதழ் ஒரு சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. அட்லாண்டாகணேஷின் 'அண்டாலாண்டா பக்கம்' சிறப்பிதழாக அமைந் துள்ளது கண்டு மகிழ்ச்சி. அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள். மூத்த எழுத்தாளர் நீல. பத்மநாபன் அவர்களைப் பற்றி சிறப்பு கட்டுரையும், அவரது சிறுகதை 'அரிசி' இரண்டும் பிரமாதம்.

மீராசிவகுமார் 'நாங்கள் கண்ட நாயக்ரா' கட்டுரை மூலம் வாசகர்களை நயாக்ராவிற்கு ஒரு அருமையான சுற்றுலா அழைத்துச் சென்றுவிட்டார். நயாக்ராவை யே பார்க்காத எனக்கு அதுபற்றி தகவல் அறிந்து கொள்ள வைத்ததற்கு நன்றி.

அமெரிக்க மண்ணில் தமிழ் மணம், தென்றலாக வலம் வர பெரும்பணி புரியும் 'தென்றல்' மாத இதழினை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சு. விசுவநாதன், சென்னை
******


'ஹனுமான் பெருமை' படித்ததும் மயிர்கூச்சல் எடுக்க வைத்தது. தெரிந்த கதைகளுக்கு உள்ளி ருக்கும் அர்த்தத்தை திரு என்.எஸ். நடராஜன் அவர்கள் மிக அருமையாக எழுதி இருந்தார். இதை படிக்க வாய்ப்பு அளித்த திரு. நடராஜனுக்கும், தென்றலுக்கும் நன்றி. இந்த மாத சிறுகதைகள் அருமை.
மிகவும் தரமான ஒரு பத்திரிக்கையை, வெளி நாட்டில் இலவசமா, மாதம் தவறாமல், வெளியிட்டு வருவது சாதாரண காரியமல்ல என்று வாசகர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். சந்தாதாரர் ஆவதன் மூலமும், தனக்கு தெரிந்த, மற்றவர்களுக்கும் பயனுள்ளதான ரசிக்கத்தக்க விஷயங்களை ஒரு மாதத்திற்கு 1 மணி நேரம் செலவிட்டு எழுதி அனுப்புவதன் மூலமும் தென்றல் போன்ற இலக்கியச் சேவை தொடர முடியும். தொலைக்காட்சி பெட்டிக்கு மாதம் பல டாலர் கொடுக்கிறோம். பொன்னான மணிகளையும் தருகிறோம். அதில் ஒரு சிறு பகுதியை தமிழ் சேவைக்க செலவிடக் கூடாதா?

மீராசிவகுமார்
******


நான் சமீபத்தில் ஒரு முக்கிய நண்பரின் வீட்டிற்கு டின்னருக்காக போய் இருந்தேன். போன இடத்தில் அவருடைய ரிசப்ஷன் மேஜையில் தற்செயலாக தென்றல் பத்திரிகையைப் பார்த்தேன். உடனே எடுத்து படிக்கத் தொடங்கினேன்.

மணியோ 9 p.m. 10.30 மணியும் ஆகிவிட்டது. நண்பருக்கு கொஞ்சம் சந்தேகம். இவர் புஸ்தகத்தை படிக்க வந்தாரா அல்லது டின்னருக்கு வந்து இருக்கிறாரா என்கிற சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது. எப்படியோ கொஞ்சம் சமாளித்துக் கொண்டு நான் அந்த புஸ்தகத்தை படித்துவிட்டேன். நீங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகலாம். நிதானமாக படிக்கலாம் என்றார். எனக்கு உடனே ஒரு பெரிய நிம்மதி ஏற்பட்டுவிட்டது.

அந்தப் பத்திரிக்கை மேல் ஒரு அபார பாசம் வந்துவிட்டது. ஏனெனில் நான் பிறந்தது கும்ப கோணம். எஸ்எஸ்எல்சி வரை படித்தது திருவிடை மருதூர். காலேஜ் கும்பகோணம். எங்கள் கிராமம் குடவாசல். பத்திரிகையில் திருவிடைமருதூர், ஒப்பிலை அப்பன் கோயில், நாச்சியார் கோயில் முதலிய ஸ்தலங்களைப் பற்றிய குறிப்புகளை படித்து மிகவும் ரசித்தேன். என்னுடைய பழைய நினைவுகள் வந்தன.

முன்பக்க அட்டை முதல் கடைசி அட்டை வரையில் மிக சு¨வாயக உபயோகமுள்ளதாக அமைந்துள்ளது. இந்த பத்திரிக்கை பல முக்கியமான இடங்களை விரிந்து விநியோகம் செய்ய எல்லாம் வல்ல ஆண்டவரை மனமார பிரார்த்திக்கிறேன்.

இந்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு இந்தியரும் படிக்க வேண்டிய பத்திரிக்கை.

படிக்கும்பொழுது நான் இந்தியாவில் இருப்பது போல் மனதில் ஒரு தோற்றம். உணர்ச்சிவசப் பட்டேன்.

தென்றல் காற்று இந்த தேசம் முழுவதும் வீசட்டும்.

ஒருவேண்டுகோள்

நாம் எந்த நாட்டில் இருந்தாலும், நம் நாடான இந்தியாவின் கலாச்சாரம், பண்பு, பண்டிகைகளை விடாமல் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்க வேணும். குழந்தைகள் இந்த நாட்டில் வளர்ந்தாலும், அவர்களுக்கு புனித இராமாயணம், மகாபாரதம் மற்றும் சுவையான இதிகாசங்களை பற்றி அடிக்கடி சொல்ல வேணும். நம் நாட்டின் பக்கவழக்கங்களை பொறுப்புடன் வளர்க்க காப்பாற்ற வேணும். குழந்தைகளை சற்று பொறுப்புடன் வளர்க்க வேண்டுகிறேன்.

அட்லாண்டா ராஜன்
******


எதேச்சையாக தென்றல் பத்திரிகையை ஒரு கடையில் கண்டேன். "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" என்ற டுயூனை முணுமுணுத்தவாறு ஒன்றை கையில் எடுத்தேன். காரிலேயே படிக்கத் தொடங்கிவிட்டேன். வீட்டிற்கு வந்து தொடர்ந்து படித்து முடித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அடுத்த தென்றல் வர இன்னும் மூன்று வாரமாகுமே என எண்ண ஆரம்பித்துவிட்டேன். (நிஜமாகவே அட்லாண்டாவில் அடிக்கும் வெயிலுக்கு தென்றல் வந்தால் சுகமாகத்தான் இருக்கும்).

தென்றலில் வெளியாகும் அனைத்துப் பகுதிகளும் மிகவும் மிகச் சிறப்பாக உள்ளது. அதிலும் அட்லாண்டா பக்கம் சூப்பர். அதை எழுதும் திரு. கணேஷ் அவர்கள் அட்டகாசமாக எழுதுகிறார். கோவிந்தசாமியின் சரித்திரம் மேலும் மேலும் என்ன வரும் என்ற ஆவலைத் தூண்டியது.

தென்றலின் குளுமை தொடர்ந்து வீச எனது வாழ்த்துக்கள்.

சக்கு முத்துகுமார், நாசிக் (இப்போது அட்லாண்டா)
******


தென்றல் ஊடாகத் தமிழ்த் தொண்டு ஆற்றி வரும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். மிகவும் தரமான முறையில், பொருட்செறிவான கட்டுரைகள, நேர்காணல், கற்பனை ஆக்கங்கள் முதலியன தென்றலை வளம்படுத்துகின்றன. கனடாவில் இரண்டு இலட்சம் தமிழர் களும் தரமான இலக்கியப் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இருந்தும் தென்றல் போன்று ஒரு நறுமலரை மலர வைக்கமுடியவில்லை என்பது எனது ஆதங்கம்! உங்கள் பணி தொடரட்டும்.

இ. பாலசுந்தரம்
******

© TamilOnline.com