கொத்தவால் சாவடி பாட்டு
எத்தனையோ கவிஞர்களை நாம் பார்த்திருந்தாலும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் தமிழ்க் கவிதைகள் காலத்தால் அழியாத பெட்டகம். பருகப் பருக தெவிட்டாத தேனருவிப் போல அவர் கவிதைகள் படிக்கப் படிக்க பிரமிக்கவைக்கும் ஞான ஊற்று. கவியரசரின் கவிதைகளில் காதல் உண்டு, சோகம் உண்டு, தத்துவம் உண்டு, அறிவுரை உண்டு. சிறந்த தமிழ் வளமும் உண்டு.

அமரர் கண்ணதாசனின் கவிதைகளைக் குறை சொல்பவர்களும் உண்டு. அவர் கவிதைகளின் தமிழ் நயத்தைப் புரியாத பலரும் குறை சொல்லும் ஒரு பாட்டு "பலே பாண்டியா" திரைப்படத்தில் வரும் "அத்திக்காய் காய் காய்" எனும் பாட்டு. இந்தப் பாடலைக் கொத்தவால் சாவடி (சென்னையில் இருக்கும் காய்கறி சந்தை) பாட்டு என்று கேலி செய்பவரும் உண்டும். இந்தப் பாடலில் கவியரசரின் சொல் நயம் வியக்கத்தக்கது.

உதாரணமாக, அந்தப் பாடலின் இரண்டு வரிகளைப் பார்ப்போம்.

உள்ளமெல்லாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ

இந்த வரிகளை இரு விதமாகப் பார்க்கலாம்.

உள்ளம் எல்லாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச்சு சுரைக்காயோ

அதாவது, மனம் முழுவதும் மிளகாய்ப் போல காரமாக இருப்பதால் பேசும் ஒவ்வொரு சொல்லும் சுரைக்காயைப் போல கசப்பாக வருகிறதாம்.

இதையே

உள்ளம் எல்லாம் இளகாயோ
ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ

என்று படித்தாஅல் இதன் பொருள் மாறுகிறது.

மனது கொஞ்சம் இளகி, ஒன்று இரண்டு வார்த்தைகள் பேச மாட்டாயா என்று கேட்பது போல பொருள் கொள்ளலாம்.

நண்பர்களே, அடுத்த முறை இந்த பாட்டை எங்கேயேனும் கேட்டால் அதன் வரிகளை ஊன்று கவனித்து அந்தப் பாடலை புதிய முறையில் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கவியரசரின் கவிதைகளை மேலும் ஆராயலாம்.

அதுவரை, வணக்கம் கூறி விடை பெறுகிறேன்.

நாக். A. நாகராஜன்

© TamilOnline.com