செப்டம்பர் 2002 : வாசகர் கடிதம்
நான் ஜூன் மாதம் இங்கு வந்ததிலிருந்து ஜூலை, ஆகஸ்ட் மாத தென்றல் இதழ்களை கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். அதுவும் அட்லாண்டா கணேஷின் 'அட்லாண்டா பக்கம்' சிறப்பாக அமைந்துள்ளது. அவருடைய தாயார் காலம் சென்ற திருமதி ஜெயலட்சுமி ராமசாமி (என்னுடைய குரு) என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.

சென்னையில் 9 ஆண்டுகள் அவருடைய மாணவியாக இருந்து ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்கள், கீர்த்தனைகள் என கற்றுக் கொண்டு அவருடன் எல்லா இடங்களுக்கும் சென்று வந்ததை பெருமையாக நினைக்கிறேன். தன் தயாரைப் போலவே அவருடைய மகன் 'அட்லாண்டா கணேஷ்' அமெரிக்க மண்ணில் இருந்துக் கொண்டு 'தென்றல்' வாயிலாக 'அட்லாண்டா பக்கம்' எழுதுவது படித்து பரவசமடைந்தேன்.

ஹேமா வைத்யநாதன்

******


ஸ்ரீகிருஷ்ணாவதாரம் கட்டுரையில் கிருஷ்ணாவ தாரத்தின் சிறப்பையும், பகவானின் பெருமைகளை எடுத்துரைக்கும் கீதகோவிந்தம், கோபிகாகிதம், சக்ஸரநாமம், நாராயணீயம் முதலியவைகளைப் பற்றி விளக்கியுள்ள திரு.பி.ஸ்ரீ. அவர்களுக்கு நன்றி.

தெ.மதுசூதனன் அவர்களின் எழுத்தாளர் தலைப்பில் மணிக்கொடி எழுத்தாளர் திரு. ஆர். சண்முகசுந்தரம் அவர்களைப் பற்றிய கட்டுரையும்., செயல்வீரர் திரு. காமராஜர் அவர்களைப் பற்றிய கட்டுரையும் பிரமாதம்.

தமிழ் இணையம் 2002 பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக் குறிப்பிட்டு அதற்குத் தகுதியான பதில்களைத் தொகுத்து வழங்கியுள்ள மணி மு. மணிவண்ணன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

சிறுகதைகள் பரம்பரை சொத்து, உதவி எழுதிய எழுத்தாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். கதைகள் சிறியதாக இருந்தாலும் சிந்தித்து செயல்பட தூண்டுபவை.

தமிழ்மணம் கமழ படிக்கத்தூண்டும் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், சந்திப்புகள், துணுக்குகள் இவகைளும் தென்றல் காற்றாக மனதிற்கு மகிழ்ச்சியூட்டி வலம் வர பெரும் தொண்டு புரியும் 'தென்றல்' மாத இதழ் குழுவினை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சு. விசுவநாதன், சென்னை

******


நான் ஸன்னிவேல்கோவில் சென்றபோது உங்கள் ஜூலை மாத தென்றல் பத்திரிகை படித்து பரவசமடைந்தேன். ஆன்மீக கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது.

இந்தியாவின் பல புராதன கோவில்கள் பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும் தென்றல் பத்திரிகைக்கு மிகவும் நன்றி.

அம்பா ராமநாதன்

******


ஆகஸ்ட் மாத 'தென்றல்' இதழ் கிடைக்கப் பெற்றேன். என்னுடைய 'மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி' என்ற கட்டுரை வெளியாகியிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

N.S.நடராஜன்

******

© TamilOnline.com