பாரதியார் கதைகள்
ஓநாயும் வீட்டு நாயும்

தென் இந்தியாவில் உள்ள மன்னார் கடற் கரையை அடுத்து ஒரு பெருங்காடு இருக்கிறது. அக்காட்டிற்கும் அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களுக்கும் அதிபதியாய் ஒரு பாளையக் காரர் இருந்தார். அவர் பெயர் உக்கிரசேனப் பாண்டியன். அவர் யுத்தப் பிரியர். அவர் புலி, கரடி, யானை, சிம்மம் முதலான காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தர். பலவகையான வேட்டை நாய்கள் அவரிடத்தில் இருந்தன.

அதிகாலையில் ஒருநாள் அவர் வேட்டைக்குப் புறப்பட்டார். தான் மிகுந்த அன்பு பாராட்டி வளர்த்து வந்த பகதூர் என்ற ஒரு நாயைத் தன் கூட இட்டுக்கொண்டு சென்றார். அந்த நாயானது வெகுகாலமாய் காட்டிலே இருந்தபடியால் அந்தக் காட்டில் யதேச்சையாய்ச் சுற்றித் திரிய சமயம் வாய்த்தவுடனே ஆனந்த பரவசப்பட்டு, கண் கண்ட இடத்திற் கெல்லாம் ஓடியது.

'பகதூர்' பார்வைக்கு அழகாய் இருந்தது. மிகுந்த சதைக் கொழுப்பு அதற்குண்டு. அதன் உடம்பு தினந்தோறும் கழுவப்பட்டு வந்ததால் தளதளப்பாய் இருந்தது.

அக்காட்டில் ஓநாய்கள் விசேஷமாய் இருந்தன.

ஓநாய் வேட்டை தன் அந்தஸ்துக்குத் தகா தென்பது உக்கிரசேனனுடைய கொள்கை. அக்காரணத்தாலேதான் அந்த ஆரண்யத்தில் ஓநாய்கள் நிர்ப்பயமாய் சஞ்சரித்தன.

அன்று ஒரு ஓநாய் தன் வழியில் குறுக்கிட்ட 'பகதூரை'ப் பார்த்து அதிசயப்பட்டு அத்துடன் சம்பாஷிக்க விருப்பம் கொண்டது.

ஓநாய்: ஹே! சகோதரா, நான் உன்னைச் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன். எனக்குத் தயவு செய்து விடைகள் அளிப்பாயா?

வீட்டு நாய்: அடா, ஓநாயே! நாம் நம்முடைய அந்தஸ்க்குக் குறைவான எந்த நாயோடும் சினேகம் பாராட்டுவதில்லை. ஆயினும், உன்மேல் நம்மை அறியாமலே நமக்குப் பீரிதி ஏற்படுகிற படியால் நீ கேட்கும் கேள்விகளுக்கு 'ஜவாப்' சொல்லச் சம்மதித்தோம்.

ஓநாய்: ஐயா, உம்முடைய அந்தஸ்து என்ன? நீ வசிக்கும் இடம் எங்கே? இக்காட்டிற்குள் வந்த காரணம் என்ன? உமக்கு இவ்வளவு சுகமான வாழ்க்கை எங்ஙனம் ஏற்பட்டது?

வீட்டுநாய்: நாம் உக்கிரசேன பாண்டியனிடத்தில் இருக்கிறோம். அவர் நமக்கு ராஜோபசாரம் செய்து வருகிறார். நமக்கும் அவரிடத்தில் பக்தி உண்டு. நம்மை அவர் மற்றெந்த நாய்களைக் காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.

ஓநாய்: அண்ணா, என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? காற்றிலும், மழையிலும், வெயி லிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரைதேட வேண்டி இருக்கிறது. பசியின் கொடுமையை சகிக்க முடியாததாய் இருக்கிறது.

வீட்டுநாய்: தம்பி, உன்னுடைய ஊழ்வினைப் பயனை நீயே அனுபவித்துத் தீர வேண்டும். பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாய் நமக்கு இப்போது இந்தப் பதவி கிடைத்தது.

ஓநாய்: நாயாரே, நானும் உக்கிரசேனனுடைய நட்பை நாடி வரலாமா? சுக துக்கங்களே சமரச மாய் இருந்தால் மாத்திரமே இவ்வுலக வாழ்க்கை சுகிக்கத் தக்கது. என்னுடைய கஷ்ட காலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.

வீட்டுநாய்: நல்லதப்பா, என் கூட வா.

இருவரும் சம்பாஷித்துக் கொண்டே வழி நடந்தார்கள். திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுசயம் தோன்றிற்று. பகதூரின் கழுத்தைச் சுற்றி ஒரு அகலமான தழுப்பு இருந்தது. ஓநாய் அதைப் பார்த்தவுடன் ஒரு கேள்வி கேட்டது.

ஓநாய்: பகதூர், உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணம் என்ன?

பகதூர்: (வீட்டு நாய்) ஓ, அது ஒன்றுமில்லை. எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது. அதன் தடம் தெரியலாம்.

ஓநாய்: அந்தப் பொன் பதக்கம் எங்கே? நீர் ஏன் அதைப் போட்டுக் கொண்டு வரவில்லை?

பகதூர்: என்னை வெள்ளிச் சங்கிலியால் கட்டும்பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.

ஓநாய்: உம்மை ஏன் கட்டவேண்டும், யார் கட்டுகிறார்கள்?

பகதூர்: என்னுடைய எஜமானர் என்னைக் கட்டுவார். அவரைப் பார்க்கவரும் மனிதர்கள் என்னைக் கண்டு அஞ்சாதிருக்கும் படி என்னைக் கட்டி வைப்பார்கள்.

ஓநாய்: தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா? நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப் பேசினாய்.

நான் சுதந்திரப் பிரியன். எனக்கு எஜமானும் இல்லை; சங்கிலியும் இல்லை. கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன். யதேச்சையாய் எங்கும் செல்வேன்; எதையும் தின்பேன்; எதையும் சொல்வேன்; எவரோடும் சேர்வேன்.

பராதீனம் பிராண சங்கடம்; ஒருவருடைய ஆக்கினைப்படி வரவோ போகவோ, உண்ணவோ உறங்கவோ, மலம் ஜலம் கழிக்கவோ சம்மதித்து இருப்பவன் மகா நீசனாய் இருக்க வேண்டும்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்க மடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப் போய்விட்டது.

© TamilOnline.com