நவராத்திரி ஸ்பெஷல்
நவராத்திரியில் தினமும் மாலை சுண்டல் செய்வது வழக்கம். கீழே சொல்லியபடி தினமும் ஒரு சுண்டலாகச் செய்யலாம்.

பின் வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைக்கவும். கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக் கடலை, வெள்ளைப் பட்டாணி, பச்சை வேற்கடலை, கருப்பு காராமணி, சிவப்பு காராமணி, பாசிப் பயறு.

சுண்டல்

தேவையான பொருட்கள்
மேலே குறிப்பிட்டுள்ள
ஏதேனும் ஒரு பயறு - 2 கப்
மஞ்சள் பொடி - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/8 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 (கிள்ளியது)
பெருங்காயத் தூள் - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

செய்முறை

பயறை நன்கு கழுவி முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.

மஞ்சள் பொடி சேர்த்து, ஊறிய பயறை குக்கரில் நன்கு வேகவைக்கவும். எண்ணெய் சூடானவுடன் கடுகை பொரிக்கவும், கடுகு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும்.

உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறியவுடன் கருவேப்பிலை இலைகளைச் சேர்த்துப் பொரித் தெடுக்கவும். வேகவைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, குறைந்த வெப்பத்தில் வைக்கவும். தேங்காய் துருவலை இதில் சேர்க்கவும்.

பரிமாறுவதற்கு முன்பாக எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கிளரவும்.

பின் குறிப்பு: கடலை பருப்பு மற்றும் பாசிப் பருப்பு ஆகியவை கொண்டும் சுண்டல் செய்யலாம். ஆனால் இவற்றை ஊற வைக்கத் தேவையில்லை. குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் போதும். மற்றபடி மேற்கூறிய செய்முறையை பின்பற்றவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com