வாய் விட்டு சிரி!
'விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம்', 'தமிழ் களம்' என்ற மாதந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ளது. பட்டி மன்றம், சிரிப்பு சபை, கவிதை வாசிப்பு போன்ற தலைப்புகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தார் விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் தலைவர் திரு. சிவகுமார் சே"ப்பன்.

'தமிழ் களத்தின்' தொடக்கமாக, 'சிரிப்பு சபை' (humour club) நிகழ்ச்சி செப்டம்பர் 15ம் தேதி, 'வாய் விட்டு சிரி!' என்ற தலைப்பில் மில்பிடாஸ் நூலகத்தில் நடந்தது. தென்றல் வாசகர்களுக்கு பரிச்சயமான 'ஸ்ரீகோண்டு' இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வாய் விட்டு சிரிப்பதின் பலன்களை சொல்லிவிட்டு, பல ஜோக்குகள் சொல்லி சிரிக்க வைத்தார் ஸ்ரீகோண்டு.

வந்திருந்த நேயர்கள் தாங்கள் கேட்ட, படித்த, சொந்த - கடி, வெடி ஜோக்குகள் சொல்ல வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவற்றிலிருந்து சில ஜோக்குகள்:

கணவனிடம் மனைவி கேட்டாள்: பக்கத்து வீட்டு விமலாவிற்கு அவளது புருஷன் எவ்வளவு ஆசையாக முத்தம் கொடுக்கிறார் தெரியுமா?

நீங்கள் எப்போது அப்படி முத்தம் கொடுப்பீர்?

கணவன் சொன்னான்: ஏற்கனவே முத்தம் கொடுத்து விமலாவின் புருஷனிடம் நான் அடிவாங்கியது பத்தாதா?!!

ஓர் அமெரிக்கன், ரஷ்யன், இந்தியன் மூவரும் ஒரு கப்பல் பயணத்தின் போது சந்தித்தார்கள். ரஷ்யன் பெருமையாகச் சொன்னான் இந்த கப்பல் என்ன பிரமாதம், எங்கள் நாட்டு நீர்-மூழ்கி கப்பல்கள் கடலின் தரையைத் தொட்டுக்கொண்டு போகும், தெரியுமா?!! மற்ற இருவரும் ஆச்சரியத்துடன் அப்படியா?! என்று வினவ, ரஷ்யன் சொன்னான் இல்லை, இல்லை. கடல் தரையில் இருந்து ஒரு மைல் மேலே தான் போகும்!

இதைக் கேட்ட அமெரிக்கன் எங்கள் நாட்டு நவீன விமானங்கள், வானத்தை உரசியபடி போகும், தெரியுமா!! என்று சொன்னான். மற்ற இருவரும் ஆச்சரியத்துடன் உண்மையாகவா?! என்று வினவ, அமெரிக்கன் சொன்னான் இல்லை, இல்லை. வானத்தில் இருந்து ஒரு அடி கீழே தான் போகும்!!

இது வரை அமைதியாக இருந்த இந்தியன் இதெல்லாம் என்ன பிரமாதம், எங்கள் நாட்டு மக்கள் மூக்கு வழியாக சாப்பிடுவார்கள், தெரியுமா!! என்று சொன்னான். மற்ற இருவரும் இதைக் கேட்டு பயந்து போய் நிஜமாகவா?! என்று அலற, இந்தியன் சொன்னான் இல்லை, இல்லை. மூக்கிலிருந்து ஒரு இஞ்ச் கீழே தான் சாப்பிடுவார்கள்!!!

வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஐந்து வயது குழந்தை ஒன்று சொன்ன ஜோக் பிரமாதம் - தமிழ் நாட்டிலிருந்து கேரளாவிற்குச் சென்றிருந்த ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி கேட்டார். அதற்கு அந்த கேரளத்துக்காரர் ஈரோடு, திருச்சி போனால் அது வரும் என்று பதில் சொன்னார். தமிழருக்கோ ஒரே குழப்பம், ஏன் ஈரோடு, திருச்சி போக வேண்டும் என்று. என்ன உங்களுக்கும் புரியவில்லையா? கேரளத்துக்காரர் மலையாளத்தில், இந்த ரோடில் திரும்பிப் போனால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வரும் என்று கூறியிருக்கிறார்!!

பல நல்ல ஜோக்குகள் கேட்டு நேயர்கள் விட்டு விட்டு சிரித்தாலும், வாய் விட்டு சிரித்தனர். நேயர்களுக்காக, நேயர்களைக்கொண்டு, நேயர் களே நடத்திய 'வாய் விட்டு சிரி' நிகழ்ச்சி வித்தியாசமாகவும், ரசி(ரி)க்கும் படியாகவும் இருந்தது!

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com