தாகத்தின் ஏக்கம்
என் பார்வையில் இஸ்லாம்

'மிக இளமையான, மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்!'' (Islam is the youngest and most misunderstood religion) - என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு நாரதகான சபாவில் பல்சமய நாட்டிய விழா. சீக்கிய, பெளத்த, ஜைன, கிறிஸ்தவம் எனப் பல மதங்களைப் பற்றி நாட்டியமாடப் பலர் முன்வந்தனர். இஸ்லாம் பற்றி நாட்டியம் நடத்த ஒருவரும் முன்வரவில்லை; எல்லோருக்கும் ஒருவித அச்சம்.

இந்தச் சூழ்நிலையில் ஏற்பாடு செய்தவர்கள் என்னை அணுகினார்கள். கலையில் நான் பைத்தியம்; பிடிவாதம்.

அந்த நிகழ்ச்சி நடத்த எனக்கு வழிகாட்டி கவிக்கோ அப்துல் ரகுமான். முற்போக்கான எழுத்தாளர் அவர். ஆர்வத்தோடு சொல்லிக் கொடுத்தார். ஏழெட்டு முறை சந்தித்து விவாதித்தேன். பல்வேறு சமயங்களோடு இஸ்லாத்தை ஒப்பிட்டு நிறைய விஷயங்களைச் சொன்னார்.

இஸ்லாம் பற்றி நான் நடத்திய நாட்டியத்துக்குப் பெயர் தர்காஸ். தர்காஸ் என்றால் அம்பறாத்துணி (அப்புகளை வைத்துக் கொள்ளும் கூடு) என்று பொருள்.

திருவல்லிக்கேணிக்குப் போய் விதவிதமான குல்லா வாங்கினேன். ரொம்பப் புதுமையான அனுபவம் அது. என்னுடைய காஸ்ட்யூம்களை நானே டிசைன் செய்தேன்.

எப்படி மண்டியிடுவது, நமாஸ் செய்வது, கழுத்தைத் திருப்புவது, குர்ஆன் படிப்பது, தலையில்இஜாப் எப்படிக் கட்டுவது என்பது உள்பட நுணுக்கமான விஷயங்களை அப்துல் ரகுமான் சொல்லிக்கொடுத்தார்.

நிகழ்ச்சியின் அரங்கேற்றம், பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு வழக்கமாக இசைக்கும் கர்நாடக இசை, வீணை, வயலின் எல்லாம் மிஸ்ஸிங். அரேபிய பாலைவனத்தில் செல்வோர் பாடிச் செல்லும் பாட்டும், தப்பு மாதிரி டரம்ஸ¤ம்தான் மியூசிக். ஆடியன்ஸை மூடுக்குக் கொண்டு வர்றதுக்காக, நபிகள் பற்றி ஆப்ரிக்கப் பாடகர் பாபாமால் பாடிய ஒரு பாடல் பாடப்பட்டது. திரை அகல, முஸ்லிம் பெண்ணான நான். கீழே மண்டியிட்டுத் தொழுதேன். காட்சிக்குக் காட்சி கிளாப்ஸ். ஹஜ் போவதைப் பற்றியும் இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் பற்றியும் நாட்டியம். அப்போதும் காட்சிக்குக் காட்சி கிளாப்ஸ்.

இருளில் சூரியன் போல வந்த முகமது நபிகளைப் பற்றிய 'அறமுரசு' என்ற கவிக்கோ ரகுமானின் பாடலை வர்ணம் மாதிரி பண்ணினேன். கிளைமாக்ஸ். அடுத்து, அனுமசூம்தாரின் ஆங்கிலக் கவிதை.

பர்தா அணிந்து ஏராளமான பெண்களும், குழந்தைகளும் வந்திருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் பாராட்டு மழையில் குளிர்வித்தார்கள். என்னால் மறக்க முடியாத அனுபவம் அது.

சிறு பிசகுகூட இல்லாமல் நிகழ்ச்சியை முடித்ததில் ரகுமான் சாருக்கு ரொம்ப சந்தோஷம். மார்க்கத்தில் தேர்ந்த அறிஞர்கள், நாட்டிய விற்பன்னர்கள் பலர் அதில் வந்திருந்தார்கங்ள. ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் பார்த்துப் பாராட்டினார்கள். தூண்கள் எதுவும் மறைக்காமல், அகண்ட சமவெளியாய் உள்ள மசூதியின் 'சூன்யம்' எனக்குப் பிடித்தமான விஷயம்.

நுண்ணிய வேலைப்பாட்டில் முஸ்லிம்களை யாரும் விஞ்சமுடியாது. அதில் வல்லவர்கள அவர்கள். நபிகள் பெருமானுக்கு ஒரு சொரூபம் தரக்கூடாத ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ள, எப்படியெப்படியோ அழகழகாக ஓவியங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றுதான் எண்ணுகிறேன். இதனால், மிகவும் நுட்பமான நகாஸ் வேலைகளில் பிரசித்திப் பெற்று திகழ்கிறார்கள். அரபி, உருது எழுத்துக்கள் ஒரு நேர்க்கோட்டில் செல்லாது. உலக அதிசயமான தாஜ்மகாலில் அழகழகான பூக்கள். இலைகள்தான் வரையப்பட்டிருக்கும். ஒரே நேர்கோட்டில் செல்லும் sharp lines-ஐ பார்க்க முடியாது.

பாலைவன அனலின் ஏக்கம்தான் இஸ்லாம். பூவைச் சுற்றி வண்டு வருவதைப் போல, நெருப்பைத் தேடி பூச்சிகள் செல்வதைப் போல, அல்லாஹ்வை நெருக்கும் ஏக்கமே இஸ்லாத்தின் கலையாக இருக்கிறது.

யாரும் யாருக்கும் உயர்ந்தவர்களும் அல்ல; தாழ்ந்தவர்களும் அல்ல என்ற சமத்துவம்தான் இஸ்லாத்தின் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். குழந்தை தூய்மையானது. ஒவ்வொரு குழந்தையிலும் spirit of islam இருக்கு. ஜாதிப் பிரிவுகள் இல்லாத சகோதரத்துவம் மிகவும் உயர்ந்த விஷயம்.

இஸ்லாமியரின் குரலில்கூட ஒரு ஏக்கத்தைக் காண்கிறேன். பிஸ்மில் லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், அல்லாஹ¥ அக்பர் என எல்லா இறைவணக்கப் பாடல்களையுமே இழுத்துப் பாடுகிறார்கள். பாலைவனத்தின் அனல் காற்றில், தாகத்தின் ஏக்கம் போலவே அந்தக் குரல் தோன்றுகிறது. மொத்தத்தில் இஸ்லாம் மதமே மிகவும் மென்மையான. இதை இப்போது நம்புவார்களா?

முஸ்லீம்கள் என்றாலே பயங்கரமானவர்கள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டவிட்டது. புதுமைக்கு, நவீனத்துக்கு, முற்போக்குச் சிந்தனைக்கு அங்கே இடமில்லை என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. இதை மாற்றுவதிலும் - தவறான புரிதலை அகற்றுவதிலும், முஸ்லிம் சமூகத்து மிதவாதிகள், கலைஞர்கள், அறிஞர்களுக்கு மிகப் பெரிய கடமை இருக்கிறது. அதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.!

அனிதா ரத்னம்

நன்றி: தினமணி ஈகைப் பெருநாள் மலர், 2001

© TamilOnline.com