ராகமாலிகா - பத்தாம் ஆண்டு நிறைவுவிழா
San Francisco வளைகுடாப் பகுதியில் பிரபலமான கர்நாடக இசைப் பாடகி திருமதி. ஆஷா ரமேஷ் அவர்கள், 'ராகமாலிகா' என்னும் இசைப் பள்ளியை நிறுவி, மாணவ மாணவியர்க்கு இசைப் பயற்சி அளித்து வருகிறார். சென்ற நவம்பர் மாதம் 23 ம் நாள் மாலையில் 'ராகமாலிகா'வின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா San Jose நகரிலுள்ள CET performing Arts Center - இல் சிறப்பாக நடந்தேறியது. ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த திருமதி. மாலதி லஷ்மண் அவர்களிடம் முதலில் இசைப் பயிற்சி பெற்ற ஆஷா, தமது குடும்பம் சென்னை நகருக்கு வந்தபின் சென்னை பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் சேர்ந்து பயின்று இளங்கலை (B.A.) மற்றும் முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். பிறகு சங்கீத கலாநிதி டி.கே. ஜெயராமனிடம் பயிற்சி பெறும் அரிய வாய்ப்பு கிடைத்தது. திரு. ஜெயராமனின் மறைவிற்குப் பிறகு நங்கநல்லூர் வி. ராமநாதன் அவர்களைக் குருவாக ஏற்று ஆஷா தமது இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார். திருமணத்திற்குப் பிறகு வளைகுடாப் பகுதியில் குடியேறி இசைநிகழ்ச்சிகளை வழங்கியும், இசையைக் கற்பித்தும் தமது சங்கீத வாழ்வைத் தொடர்ந்து வருகிறார். இனியகுரல், சங்கீத ஞானம், பாடல்களைப் பாடும் பாவம் இவற்றினால் ரசிகர்களைக் கவர்ந்த ஆஷா, ஒரு இசையமைப் பாளரும் கூட. வளைகுடாப் பகுதியிலுள்ள பல நாட்டியப் பள்ளிகள் நிகழ்த்தி வரும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஆஷாவின் இனிய இசை ஆதரவாக அமைந்து வருகின்றது.

'ராகமாலிகா' இசை நிகழ்ச்சியில் ஆஷாவும், அவரிடம் இசை பயிலும் மாணவ மாணவியரும் பாடல்களை இசைக்க, வளைகுடாப் பகுதியில் பிரபலமான வயலின் கலைஞர்கள் திருமதி. அனுராதா ஸ்ரீதர், திருமதி. சாந்தி நாராயணன், மிருதங்கக் கலைஞர்கள் திரு என். நாராயணன், திரு. ஸ்ரீராம் பிரும்மானந்தன், தபலா கலைஞர் திரு ரவி/குடாலா, மோர்சிங் கலைஞர் திரு ஏ. மஹாதேவன், 'drums' கலைஞர் செல்வி. ராஷ்மி விஸ்வநாதன் ஆகியோர் தக்க பக்கவாத்ய இசையை வழங்கி, நிகழ்ச்சியைக் களைகட்ட வைத்தனர்.

ஆரம்பத்தில் பாடிய இளஞ்சிறுவர்களும் சிறுமியரும் சுருதியுடன் இணைந்து தாளம் தவறாமல் தமது இளங்குரல்களில் இசைத்தது 'ராகமாலிகா' நிகழ்ச்சிக்கு நல்லதொரு துவக்கமாக அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையோர் அனைவருமே மனங்கவரும் வகையில் நன்றாகப் பாடினார்கள். பக்திரசம் மிகுந்த பஜனைப் பாடல்களிலிருந்து கம்பீரமான கர்நாடக இசைப் படல்கள் வரை எல்லாப் பாடல்களும் நன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்த்தியாக இசைக்கப்பட்டன. கல்யாணி ராகத்தில் சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீக்ஷ¢தர் ஆகியோர் இயற்றிய பாடல்களை முறையே பல்லவி, அனுபல்லவி, சரணமாக இணைத்து இசைத்தது புதுமையாக இருந்ததோடு மட்டுமில்லாது கவியமைப்பு, இசையமைப்பு, பாடலின் பாவம் இவைகளில் மும்மூர்த்திகளின் பாணிகள் வேறுபட்டிருப்பதையும் அழகாக எடுத்துக் காட்டியது.

இசைக்குத் 'தாளம்' எவ்வளவு ஆதாரமாக அமைகிறது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் நடந்த 'வாத்ய விருத்தம்' நிகழ்ச்சியின் போது மிருதங்கம், தபலா மற்றும் மோர்சிங் கலைஞர்கள் தமது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வடையச் செய்தனர். கர்நாடக இசை நிகழ்ச்சியில் 'Druns' பயன்படுத்தியது புதுமையாக இருந்தாலும், நவராகமாலிகை வர்ணத்தைவிட இறுதியில் இடம்பெற்ற 'சங்கமம்' எனும் 'fusion' இசையில்தான் 'Druns' இணைந்து ஒலித்தது.

'ராகமாலிகா' நிகழ்ச்சியில் இசைக்கு மட்டு மல்லாது நடனத்திற்கும் முக்கியத்துவம் இருந்தது. வளைகுடா பகுதியின் நாட்டியப் பள்ளிகளின் இயக்குனர்களான திருமதி. மைதிலி குமார் (அபிநயா பள்ளியின் இயக்குனர்) திருமதி. இந்துமதி கணேஷ்( நிருத்யோலஸா பள்ளியின் இயக்குனர்), மற்றும் திருமதி வித்யா சுப்ரமணியன் (லாஸ்யா பள்ளியின் இயக்குனர்) ஆகியோர் இணைந்து விநாயகரின் பெருமைகளை எடுத்துரைக்கும் திரு டி.வி. கோபாலகிருஷ்ணனின் பாடலுக்கு ஆஷாவின் இசையில் சிறப்பாக நடனமாடினார்கள். வயலின் கலைஞர்க, தாள வாத்யக்கலைஞர்கள், நடன மணிகள் அனைவரும் ஒத்துழைத்து ஆஷாவின் இசைநிகழ்ச்சியினை நிறைவு செய்தது அவர் களிடையே நிலவும் நட்பையும் நல்லுறவையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த பல்வேறு கலைஞர்களின் திறமைகள் வெளியாகும் வகையில் நிகழ்ச்சிக்கு வடிவம் கொடுத்த ஆஷா, தாம் தனியாக ராக ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களுடன் விஸ்தாரமாக ஒரு கீர்த்தனையாவது பாடாமல் போனது ஒரு குறையே! இறுதியில் கதிரவனைப் போற்றுவதாக சூர்யா ராகத்தில் அமைந்த தில்லானா, ஆஷா ஒரு நல்ல கம்போஸர் என்பதைக் காட்டியது. நிகழ்ச்சி முழுவதிலும் பல்வேறு வாத்தியங்களுடன் இசையை இணைத்து நடத்தியதில் ஆஷா ஒரு நல்ல 'music conductor' என்பதும் தெளிவாகியது. மொத்தத்தில் 'ராகமாலிகா' இசை, தாளம், நடனம் ஆகியவை இணைந்த ஒரு நல்ல பல்சுவை நிகழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை!.

அருணா

© TamilOnline.com