தியாகராஜ ஆராதனை விழா
நாத ப்ரம்மமே நாரத அம்சமே !
நாம மஹிமையை ராம நாமத்தில் உணர்த்தியவனே
கோடிக்கணக்கான ராம நாமத்தில்
ராமநை நேரில் தரித்தவனே
திருவையாறில் பிறந்த தியாகராஜனே,
சத்குரு தியாகபிரம்மமே
திக்கெங்கும் தியாகராஜஆராதனை விழா
கடல் கடந்தும் ஒலிக்கிறதே
திரளான மக்கள் கூட்டம் நின் ஆராதனையில் அஞ்சலி செலுத்துவதுதான் என்னே!

பிப் 1ம்தேதி காலை லேசான மழை. சிலுசிலுப்பு குளிருடன் sanjose CET Centre விழா கோலம் பூண்டது. மேடையில் Bay area சீனியர் வித்வான்கள் பாடகர்கள், பாடகிகள் புடைசூழ கிட்டத்தட்ட 40 பேருடன் நிகழ்ச்சியை ஆரம்பிக்க SIFA செகரட்டரி திருமதி விஜயா மகாதேவன் தனது இனிய குரலில் வரவேற்று பேசி பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஆரம்பித்து பாட கேட்டு கொண்டதற்கிணங்க திருமதி ஆஷா ரமேஷ் lead பண்ண ஜெகதா நந்தகவுடன் ஆரம்பம். எல்லோரும் 5 கீர்த்தனைகளையும் பக்தி பரவசத்துடன் பாடி ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிக்கு தங்கள் வந்தனத்தை தெரிவித்தது மெய்சிலிர்த்தது.

தொடர்ந்து சனி, ஞாயிறு இரண்டு நாளம் இளம்பாடகர்களும் சங்கீதம் பயின்று வரும் மாணவ மாணவிகளும், விணை, வயலின் போன்ற வாத்யம் வாசிப்பவர்களும் மிகவும் சிரத்தையாக ஆர்வத்துடன் நன்கு பாடியது நிகழ்ச்சிக்கு மெருகேற்றியது. எல்லோருக்கும் வரிசையாக சந்தர்ப்பம் கொடுத்து மேடையில் பாட வைத்த பெருமை SIFA குழுவினரை சாரும்.

செவிக்குணவுடன் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதற்கேற்ப பாட்டை கேட்டு ரசித்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் பாடி பங்கேற்றவர்களுக்கும் காலைக்குளிருக்கு இதமாக சுடச்சுட காபி. டீ பின்னர் சாப்பாடு என வழங்கியது மிக திருப்தியாக இருந்தது.

Bay areaவில் குழந்தைகள் எவ்வளவு ஆர்வத்துடன் ஆசிரியர்களிடம் சங்கீதம் பயின்று தகுந்த பயிற்சியுடன் பக்திபாவத்துடன் நன்கு பாடினர் என நினைக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. கலைமணம் கமழும் காவிரியாற்றங்கரை திருவையாற்றில் அனுபவித்த சங்கீத மணம் கலைவளம் கொழித்து வரும் கலிபோர்னியாவிலும் அனுபவிக்க முடிகிறது என்பதில் ஐயமில்லை. நமது பண்பும் கலாசாரமும் கடல்கடந்தும் காப்பாற்றி கடைப் பிடிக்கப்படுவதை காண மட்டற்ற மகிழ்ச்சி.

WELL DONE SIFA!!

இதை போலவே மே மாதம் மும்மூர்த்திகள் விழா திருவாரூரில் நடப்பது போல் நடத்தலாமே! தியாகராஜகிருதிகளுடன் தீக்ஷ¢தர், சியாமா சாஸ்திரிகள் கிருதிகளும் நிறைய பேர் கற்றுக் கொள்ள முன் வருவதற்கு சந்தர்ப்பம் தரலாமே!!

சீதா துரைராஜ்

© TamilOnline.com