அவல் உப்புமா
தேவையான பொருட்கள்

அவல் - 1 கிண்ணம்
கடுகு - தாளிக்க
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 1 (பெரியது)
பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு
கேரட் - 1
பீன்ஸ் - 50 கிராம்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி,
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

உப்புமா தயாரிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அவலை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

அரைமணி நேரம் கழிந்தபிறகு ஊற வைத்த அவலில் உள்ள தண்ணீரை வடித்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

பிறகு வெங்காயம், கேரட், தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளை நீளவாட்டத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

கடுகு வெடித்து பருப்பு பொன்நிறமாக வரும் போது நறுக்கி வைத்துள்ள காய்கறிகள், பச்சை மிளகாய், பட்டாணி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.

அடுப்பை சிறியதாக எரியவிட்டு காய்கறிகள் அடிப்பிடித்துக் கொள்ளாமல் மெதுவாக கிளறவும்.

2 நிமிடம் கழித்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு கிளறவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் ஊற வைத்து எடுத்த அவலை காய்கறிகளில் போட்டு நன்றாக கிளறவும். 2 அல்லது 3 நிமிடத்திற்குள் உதிர் உதிராக ரவை உப்புமா போல் வரும்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி அதன் மேல் தூவவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி சூடாக அனைவருக்கும் கொடுத்தால் ருசியாக இருக்கும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com