க்ளீவ்லேண்ட தியாகராஜ ஆராதனா 2003
ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் சமயத்தில் க்ளிவ்லண்டு தியாகராஜ ஆராதனை விழா கொண்டாடப்படும். இந்த வருடமும் ஏப்ரல் 18ஆம் தேதி, புனித வெள்ளியன்று, குழந்தைகளின் போட்டிகளோடு இந்த விழா தொடங்கியது. வயது வித்தியாசமே இல்லாமல் கிட்டத்தட்ட 180 குழந்தைகள் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்திருந்து, இந்த வருடத்தில் நடைபெற்ற பல்வேறு வகையான போட்டிகளிலும் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்த சில இசைக் கலைஞர்கள் இந்தப் போட்டிகளுக்கு நடுவர்களாக இருந்தார்கள்.

ஏப்ரல் 19 ஆம்தேதி, சனிக்கிழமையன்று முறைப்படி ஆராதனை விழா கொண்டாட்டங்கள் தொடங்கின. க்ளீவ்லண்டிலுள்ள பல்வேறு குழுக்களைச் சேர்ந்த குழந்தைகள் கலந்து கொண்ட பஜனை காலையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பெரும்பாலும் இந்த விழாவுக்காக வருகை தந்திருந்த இசைக் கலைஞர்களும், க்ளீவ்லேண்டைச் சேர்ந்த இசைக்கலைஞர்களும் மேடையில் அமர்ந்து கூட்டாகச் சேர்ந்து பாடல்களை இசைத்தார்கள்.

பெரிய இசைக்கலைஞர்களின் கச்சேரி சனிக்கிழமை மாலையில் தொடங்கியது. லால்குடி ஜெயராமன் குடும்பத்தினர் முதல் கச்சேரியை நிகழ்த்தினார்கள். அந்த கச்சேரி தொடங்குவதற்கு முன்னால் வரை, அந்த நாள் முழுவதும், பாட்டிசைப்பதிலும், இசை வாத்தியங்கள் இசைப்பதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த குழந்தைகளுக்குத் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

திறமை வாய்ந்த நிறைய குழந்தைகள் விழாவில் கலந்து கொள்ளும் ஆசையோடு வந்திருந்தாலும், நேரக்குறைவு காரணமாக எல்லாருக்கும் வாய்ப்புகொடுப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. என்றாலும், எப்போதெல்லாம் அடுத்த நிகழ்ச்சி தயாராவதற்குள் மேடை காலியாக இருக்கிறதோ அப்போதெல்லாம் குழந்தைகளுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் திறமையை ஊக்கப்படுத்தினார்கள் விழா அமைப்பாளர்கள். விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்களின் வசதிக்காக சனிக்கிழமை யன்று காலையும் மதியமும் உணவு வழங்கப்பட்டது. தானே விரும்பி முன்வந்து நிறைய பேர் இந்த உணவு தயாரித்தலில் ஈடுபட்டார்கள்.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்த கச்சேரிகளில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லையே என்பதையெல்லாம் கூட பொருட்படுத்தாமல், மக்கள் ஆர்வமாக இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

இந்த இசை விழாவிற்குச் சில பெரிய இசைக் கலைஞர்களும் வந்திருந்தார்கள். ஏற்கனவே தங்களுக்குரிய இறுக்கமான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் என்ன காரணத்திற்காக இந்த இசைவிழாவில் கலந்து கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. ஸ்ரீமதி சுதா ரகுநாதனிடம் என் ஆர்வத்தை வெளிப்படுத்தினேன்.

''உலகின் எந்த மூலையிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தாலும் நாங்கள் அங்கே செல்வோம். ஒரு வேளை இது போன்ற ஒரு இசை விழா ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்து, அவர்கள் எங்களை அழைத்திருந்தால் நாங்கள் அங்கேயும் செல்வோம். ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் சமயத்தில் மட்டும் கொண்டாடப்படும் இந்த க்ளீவ்லேண்டு ஆராதனா இசை விழா இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஒரே இடத்தைச் சேர்ந்த (க்ளீவ்லேண்டு) எல்லா இசைக்கலைஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் இந்த இசைவிழாவை நான் ரொம்பவே ரசித்து மகிழ்கிறேன். காரணம் இது போன்ற அருமையான வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது.'' என்றார் சுதா ரகுநாதன்.

மிகுந்த ஆர்வத்தோடு இந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்ட குழந்தைகளை இவர் மிகவும் உற்சாகப்படுத்தினார். வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் குழந்தைகள் கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் காட்டி அதைக் கற்றுக் கொண்டு, தங்கள் திறமையை இது போன்ற விழாக்களில் வெளிப்படுத்தும்போது, விழாவிற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்களால் ஊக்குவிக்கப்பட்டு சரியாக வழிகாட்டப்படுவதால், இது அவர்களின் எதிர்காலத்துக்கு நிச்சயம் பேருதவியாக இருக்கும் என்பது என்னுடைய சொந்த கருத்து. கூடவே விழாவிற்கு வருகை தந்திருந்த சிறப்பு இசைக்கலைஞர்கள் வழங்கிய விளக்க உரையினால், குழந்தைகள் கர்நாடக இசை தொடர்புடைய பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த ஆராதனை விழா ஏப்ரல் 27ஆம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றது.

அடுத்த வருடம் இந்த ஆராதனை விழா ஏப்ரல் 9, 2004 அன்று தொடங்கும் என்று விழாக் குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது.

சுமதி சங்கரன்

© TamilOnline.com