உயிரே!
'கர்...கர்...கர்!! ஊரென்னவோ பசுமையாக இல்லை, பஞ்சமும், பரிதவிப்பும்தான். ஆனாலும் அந்திமயங்கும் நேரத்து 'கர்கர்கர்' என்று தவளைக் கத்தல் கேட்கிறதே அதற்கு மட்டும் என்னவோ... அவ்வளவு பசுமையான பாசியில் நிறைந்து இருந்தது... எங்குமே நீர் தெரியவில்லை... அப்படி ஒரு பசுமை நிறைந்து உள்ளது. ஆனாலும் அந்த கர், கர், கர்... இரவு வரப்போகின்றது என்பதைத் தெரிவிக்கும் அறிவிப்பாகவே இருந்தது. குளக்கரையில் நான்கைந்து சிறுவர்கள் தவளை பிடிப்பதில் மும்முரமாக இருந்தார் கள். ''அடேய்! இதோ பார்! இந்தத் தவளை கண்ணைப் பார்! பளபளன்னு இருக்கு! - ''டேய்! வேலையைப் பார்த்துச் செய்யுங் கடா! இருட்டறதுக்கு முன்னாலே வேலை யை முடிக்கணும்!'' என்றான் பெரியவன். வேலை மும்முரமாகிறது. பிடித்த தவளைகள் பெரும் குவளைகளில் அடைக்கப்படுகின்றன. தமது பெரும் பயணம் நோக்கி!.

குவளையில் தவளைகளின் 'கர்...கர்...கர்'' தொடர்கிறது. ஆனாலும் சில தவளைகள் அமைதியாகிவிடுகின்றன. ''அம்மா நாமெல் லாம் எங்க போகப்போகிறோம்மா?'' ஒரு சிறு தவளை கேட்டது. அம்மா தவளையிடம் இனம் புரியாத கலவரம். ''எனக் கென்ன புள்ளே தெரியும்? பேசாமே வாயேன்'' சிறு தவளை தன் ஒத்த வயதினரிடம் போய்விடுகிறது. பயணம் நீண்ட பயணம்தான்! பயணக் களைப்பிலே சப்தம் அடங்கியே விட்டது.

ஒருவழியாக பயணம் முடிவுக்கு வந்தது. தவளைகள் பெரிய குவளைகளிலிருந்து சிறுசிறு குப்பி களுக்கு மாற்றப்பட்டன. 'தாய்-பிள்ளை, தந்தை-மகள்' என்ற உறவெல்லாம் ஏதும் இல்லை. தவளைகள்தானே! நாட்கள் சில வழக்கம் போல வேகமாக ஓடிவிட்டன. சிறுகுப்பி தவளைகள் சிறுசிறு கண்ணாடி குப்பிகளுக்குள் தனித்தனியே அடைக்கப்பட்டன. சிறுதவளைக்கோ பெருத்த ஆனந்தம்! வெளியுலகமே கண்ணாடிக் குப்பிவழி வண்ணத்துடன் தெரிகிறதே! சடக்கென்று அம்மா நினைவு! இதையெல்லாம் காட்ட முடியவில்லையே என்ற கவலையும்கூடத்தான்! வருத்தமே மட்டும், ஏக்கமே மட்டும் இந்த உலகில் விருப்பத்தைத் தந்துவிடுமா? அம்மா, அம்மா என்று சொல்லிச் சொல்லியே அறுத்துவிட்டது அந்த இளையது!

ஒளிஉமிழ காலைநேரம் துவங்கிவிட்டது. கல்லூரி கலகலப்பாகத் தொடங்கிவிட்டது. மாணவ. மாணவியர்கள் வரத்தொடங்கி விட்டார்கள். அவர்களில் சிலரிடத்தில் கவலை! பயமும்தான்! ஆமாம் இன்று ஆண்டுத்தேர்வு. என்ன செய்யப் போகிறோமோ? ஏது செய்யப் போகிறோமோ? இருக்கத்தானே செய்யும் இந்தக் கவலைகளெல்லாம்! மணியும் அடித்து விட்டது. இன்றுஅவனுக்கு 'விலங்கியல்' பரி சோதனை! 'உடற்கூறுபிரித்து' விளக்கப் பரிசோதனை! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கண்ணாடிக் குவளை! குவளை ஒவ்வொன்றிலும் ஒரு தவளை! என்னசெய்ய வேண்டுமென்று ஆசிரியர் விளக்கம் அளித்தார். பெரிய பட்டியலே தந்துவிட்டார். சில மாணவ, மாணவியரிடம் பெருத்த மகிழ்ச்சி, தாம் கற்றது அப்படியே வந்துவிட்டதே என்று! சிலர் துவண்டு போய்விட்டார்கள்! இப்படியும் ஒருநாளா?... கண்ணாடி குவளையில் தவளைகள் தமக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாது வெளியுலகைப் பார்த்தவண்ணமே இருந்தன. ஆனால் அவனோ நீர்குவளையையும், உள்ளே கண்ணிமைக்காது அவனையே தன் பளபளப்பான கண்களால் எடைபோட்டுக் கொண்டிருந்த தவளையையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.. பரிசோதனைச் சாலையில் கலகலவென்று சப்தம். சுறு சுறுப்பாக இருந்தது. அவனோ அந்தத் தவளையோ எவ்வளவு நேரம்தான் - கண்ணிமைக்காது இருந்தார்களோ? யார் அறிவார்! தேர்வு ஆசிரியர் வட்டமடித்துக் கொண்டே இருந்தார் - அது அவர் வேலை!

எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா? அவன் மெதுவாகக் கண்ணாடிக் குவளையில் கையை விடுகிறான். மனதில் பெரும் சிந்தனை! அவன் கையில் சிறுதவளை! தன் மீது மீண்டும் ஒருமுறை மனிதக்கை பட்டதும் தவளை சிரிக்கிறது. சற்றே நெளிகிறது. ஏனோ தப்பிக்க மனமில்லாமல். கையில் அடக்கமாகி விடுகிறது! அவன் தேர்வு அறையைவிட்டு வெளியே மின்னலென பாய்கிறான். படிகளில் பறக்கிறான். ஓட்டம் கல்லூரியின் பின்புறம் உள்ள நீர்குளத்தின் அருகில் முடிகிறது. தவளை சற்றே நெளிகிறது. அவன் கைகளின் அந்த நெளிவு சுளிவு தெரிகிறது. அவன் உற்று நோக்கு கிறான். உதடுகளில் வார்த்தைகள் துடிக்கின்றன. 'உயிரே! உன்னை மதிக் கிறேன்' உதடு அசைவுகள் நிற்கின்றன. குனிந்து நீரில் கைகளை மென்மையாக நனைக்கிறான். மூடிய கைகள் திறக்கின்றன. இதோ அந்த நீரினுள் அந்த சிறு உயிர் - ''தவளை என்று சொல்கிறார்கள்'' நீரினுள் பாய்கிறது. தன் பளபளப்பான கண்களால் நீரினுள் ஊடுருவிச் செல்கிறது. மாணவனுக்கு இது ஒரு பரீட்சைதான்!

ஞானாந்தவல்லி

© TamilOnline.com