கீதா பென்னட் பக்கம்
ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா, டாக்டர் எல். சுப்ரமணியம் சகோதரர்கள் என்று உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் ஒரு விஷயம் பொதுவானது என்பது புரியும். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தாலும் இவர்கள் மேல் நாட்டு இசையில் பயிற்சி பெற்றுப் பட்டமும் வாங்கியவர்கள். அதுவும் லண்டனில் உள்ள ஒரு இசைக்கல்லூரியில். மேலே சொன்ன இவர்கள் அனைவருமே நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாக்களில் மெகா செட் போட்ட பணக்கார வீடுகளைக் காட்டும் போது அங்கே நிச்சயமாக ஒரு grand piano இருக்கும். திடீரென்று கதாநாயகன் அதன் அருகே அமர்ந்து பிரமாதமாக வாசிக்க ஆரம்பித்து விடுவான். அப்படி வாசிக்க அதற்குப் பின்னால் எவ்வளவு பயிற்சி இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. இந்த மாதிரி பியானோ வைத்துக் கொள்ளவும், கற்கவும் இந்தியாவில் பொதுவாக மிக மேல்மட்டக் குடும்பங்களில் மட்டுமே சாத்தியம்.

ஆனால் வட அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இது மிக சாத்தியமே. நம்மில் பலரும் தத்தம் குழந்தைகளைச் சின்ன வயதிலேயே கர்னாடக சங்கீத்தில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் என்றும் பரத நாட்டியம், குச்சுபுடி என்றும் பயில்விக்கிறோம். நம்முடைய பாரம்பரியம், கலாசாரத்தை நாமும் மறப்பதில்லை. அடுத்த தலைமுறைக்கும் கொடுப்பதிலும் மிகவும் அக்கறை காட்டுகிறோம்.

அதே சமயத்தில் அமெரிக்காவில் கிடைக்கும் மற்ற வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறக்கூடாது. சிறு வயதிலேயே வெஸ்டர்ன் வயலின், பியானோ, சாக்ஸபோன், டிரம்ஸ் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தால் அவர்களுடைய இசையறிவு இன்னும் பலப்படும். பள்ளிக்கூடத்தில் ஆர்க்கெஸ்ட்ரா, கொயர் போன்றவற்றில் மற்ற மாணவ மாணவிகளுடன் பங்கு ஏற்கும் போது கிடைக்கும் சந்தோஷத் திற்கு அளவே இருக்காது என்பது நிச்சயம்.

ஜப்பானிய 'சுசூகி' (suzuki) என்ற முறையில் கற்பதற்கு எங்கள் மகன் ஆனந்தை அவனுடைய மூன்றாவது வயதிலேயே வயலின் வகுப்புக்கு அனுப்ப ஆரம்பித்தோம். இந்த முறையில் கர்னாடக சங்கீதம் மாதிரி தான் கற்றுக் கொடுக்கிறார்கள். சாதாரணமாக வெஸ்டர்ன் பயிலும் போது ஆரம்பித்திலிருந்தே music notes-ஐ எதிரே வைத்துக் கொண்டு வாசிக்கத்தான் சொல்லித் தரப்படும். சுசூகி முறையில் அப்படியில்லை. ஆசிரியர் ஒரு phrase வாசித்துக் காட்டுவார். அதைக் காதால் கேட்டு, கண்ணால் பார்த்து ஸ்பன்ஞ்ச் மாதிரி அப்படியே உறிஞ்சிக் கொண்டு குழந்தைகள் திருப்பி வாசித்துக் காட்டி விடுவார்கள். பெற்றோரில் ஒருத்தராவது வகுப்பு சமயத்தில் கூட இருக்க வேண்டும்.

நாலு ஸ்வரம் வாசிக்கும் குழந்தையை கூட வருடத்திற்கு ஒரு முறையாவது மேடையேற்றி விடுவார்கள். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்று எதிரில் பெருமையுடன் உட்கார்ந்திருப்பவர்களை முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டு அதுவும் வாசித்து விடும். இதனால் கிடைக்கும் தன்னம்பிக்கை அந்த குழந்தைக்குப் பிற்காலத்தில் எவ்வளவு பயன்களைத் தரும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

இது போலவே அமெரிக்காவில் உள்ள நாட்டியமும், இசையும் சொல்லிக் கொடுக்கிற ஆசிரிய/ஆசிரியைகள் பள்ளி விழா என்று வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடி எல்லா மாணவர்களையும் மேடை ஏற்றி ரசிகக் குடும்பங்களையும் எதிரே அமர வைத்து அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

© TamilOnline.com