அதிரசம்
தேவையான பொருட்கள்

அரிசி - 2 கிண்ணம்
பொடி செய்த வெல்லம் - 2 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
பொரிப்பதற்கு தேவையான சமையல் எண்ணெய் (Corn oil)

செய்முறை

அரிசி மாவு செய்ய: அரிசியை நன்றாகத் தண்ணீரில் களைந்து பின்னர் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு நீரை வடித்து விட்டு ஒரு சுத்தமான துணி மீது நிழலில் அரை மணி நேரம் உலர்த்தவும். பின் இந்த அரிசியை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடிசெய்து நன்கு சலிக்கவும். இவ்வாறு மூன்று அல்லது நான்கு முறை செய்த பின்பு அநேகமாக அரிசி முழுவதும் மாவாக ஆகிவிடும்.

அடி கனமான வாணலியில் வெல்லத்தை அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். பின்னர் இதை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி மறுபடியும் வாணலியில் விடவும். பாகு கொதிக்கும் போது சிறிது அளவு குளிர்ந்த தண்ணீர் உள்ள பாத்திரத்தில் விட்டு விரல்களால் உருட்டவும். பாகு உருட்டவராமல் தொய்ந்தால் அதுதான் வெல்லப்பாகின் சரியான பதம்.

வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி உடனே அரிசி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாக கட்டி தட்டாமல் கிளறி, ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்து கலந்து மூடி வைக்கவும். இதை முதல் நாளே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவில் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, எண்ணெய் நன்கு தடவிய சற்று கனமான பிளாஸ்டிக் பேப்பரில் (Freezer ziploc bag போன்றது) வைத்து 1/4 அங்குல கனத்துக்கு கையால் தட்டிக்கொள்ளவும். மாவு மிக கெட்டியாக இருந்தால் சிறிது பால் அல்லது தண்ணீர் விட்டுப் பிசைந்து பின்னர் தட்டவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் இவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு இரண்டு புறமும் நன்கு வேகவிட்டுப் பின்னர் எடுத்து, எண்ணெயை வடியவிடவும்.

அதிரசம் சற்றுச் சூடாக இருக்கும் போதே அதன் மீது ஒரு அடி தட்டையாக உள்ள பாத்திரத்தை வைத்து நன்றாக அழுத்தவும். அதிக எண்ணெய் வடிந்து விடும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com