புதிய தலைமைச்செயலகம்
சென்னை கோட்டூர்புரத்தில் 400 கோடி ரூபாயில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்காக, வருகிற 30ம் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளவிருக்கிறார்.

ராணிமேரி கல்லூரி வளாகம் முதலில் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, பின் எழுந்த பலத்த எதிர்ப்பால் கைவிடப்பட்டது. அதற்கு பிறகு தேர்வு செய்த சில இடங்களுக்கும் எதிர்ப்புக் கிளம்பியதால் கைவிடப்பட்டு இப்போது கோட்டூர்புரம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டிட வடிவமைப்பை 3 மாதத்துக்குள் சி.ஆர். நாராயணராவ் நிறுவனம் வழங்கியவுடன், கட்டுவதற்காக நிறுவனம் டெண்டர் மூலம் தேர்ந்து எடுக்கப்படும். அதன் பிறகு உடனடியாக கட்டிடப்பணி தொடங்கும்.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அக்டோபர் 26ம் தேதி அன்று ஒரு வரைவு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை காரணமாக புதிய தலைமைச் செயலகத் திட்டம் செயல்படுத்த முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த 2001ம் ஆண்டில் அளித்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதிய தலைமைசெயலகம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com