ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி
மூன்றாவது அணி, மூன்றாவது அணி என்று கூறிக் கொண்டிருந்த ஜெயலலிதா கடைசியில் அந்த அணியை உருவாக்கியும் காண்பித்து விட்டார். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மாற்றாக, 'ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி' என்று அதன் பெயரை அறிவித்துள்ள ஜெயலலிதா, இன்னமும் பல கட்சிகள் தங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும் என்றும், இது ஒரு வலிமையான மாற்றுக் கட்சியாகத் திகழும் என்றும் நிருபர்களிடம் தெரிவித்தார். நாட்டின் நலத்தைக் குறிக்கோளாகக் கொண்டே இந்தக் கூட்டணி அமைந்துள்ள தாகவும், இனிமேல் மாநிலக் கட்சிகளின் ஆதரவின்றி மத்தியில் ஆட்சி அமைவ தென்பது இயலாததாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இக்கூட்டணியில் சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் யாதவ், வைகோ, ஓம் பிரகாஷ் சௌட்டாலா உட்படப் பலர் இடம் பெற்றுள்ளனர்.

கூட்டணி தொடங்கிய நாளன்றே 'குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாம் மீண்டும் போட்டியிட வேண்டும். அவருக்கே எங்கள் ஆதரவு' என்றும் கூறி, காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com