யானைகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் கோயில்களிலும், தனியார் வசமும் உள்ள யானைகளுக்கு ஒரு மாத ஓய்வு முகாம் ஒன்றை அண்மையில் தமிழக அரசு நடத்துகிறது. இதற்காக முதுமலை தெப்பக்காட்டில் 15 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புத்துணர்வு முகாமுக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது பல யானைகள் லாரியில் ஏறுவதற்கே சிரமப்பட்டன. இந்த யானைகள் பெருமளவு துன்புறுத்தப் படுவதாகவும், நின்றபடியே நீண்ட தூரம் செல்வதால் யானைகள் சோர்வு அடைகின்றன என்றும், அதனால் அவற்றின் மனநிலை பாதிக்கப்படக்கூடும் என்றும் வெளியான செய்திகளை அடுத்து இதுதொடர்பான முழுவிவரங்களையும் அளிக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுகொண்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவெடுக்கும்வரை யானைகளை வாகனங்களில் முதுமலைக்குக் கொண்டு செல்வதை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதன் மூலம் தமிழக அரசுக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வளத்துறை அமைச்சகத்துக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தலைமைச்செயலகம் கட்டுவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் தமிழக அரசுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.

எனினும் முதுமலையில் தமிழக யானைகள் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டன.

© TamilOnline.com