நம் பாதுகாப்புக்கான தேவைகள்...
எல்லாப் பத்திரிக்கைகளும் பெரிய வாழ்த்துப் பாக்களுடன் அறிவித்திருக்கும் ஒரு செய்தி, இந்தியாவின் அந்நியச் செலாவணி 100 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது என்பதாகும். என்னுடைய கோணத்தில், இதற்கு பெரிய காரணம் - இந்தியாவின் படித்த மத்தியதர வர்க்கம்தான் என்பேன். NRI என்ற பெயரில் சம்பாதித்து அனுப்புபவர்கள் ஒரு காரணம்; 'the great Indian middle class market'ஐக் குறித்து (குறிவைத்து?) ஆரம்பிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் வாணிகச் சேவை நிறுவனங்கள் இன்னொரு காரணம்.

இந்த நிலையில் வேடிக்கை என்றவென்றால் எல்லா அரசியல்வாதிகளும், ஏதோ தாங்கள்தான் திட்டமிட்டுச் செயல்பட்டு இந்த இலக்கை எட்டிவிட்டதுபோல் அறிக்கை விட்டவண்ணம் இருக்கிறார்கள். இந்தியாவின் படித்த வர்க்கத்தின் சாதனையாளர்கள் இந்தச் சாதனையை அரசியல்வாதிகள் வீணடிக்க விடக் கூடாது. படித்தவர்கள்/மத்தியவர்க்கத்தினர் இந்த அரசியல் வேண்டாமென்று ஒதுங்கியிருப்பது மாறவேண்டும்.

'பணம் சம்பாதித்துப் போட்டுவிட்டேன்; மீதி உன்பாடு' என்று நம் வீட்டில் சொல்வதற்கொப்பானது இந்த மனப்பான்மை. லஞ்சம், ஊழல் ஆகியவற்றை எதிர்த்துக் குரல்கொடுப்பது முதல், அரசியலில் இன்னமும் அதிக ஈடுபாட்டுடன் நடக்கவேண்டும் - இந்தியாவிலும் மற்றும் அமெரிக்காவிலும்!

'சாக்கடை' என்று வர்ணித்துவிட்டு விலகிச் செல்வதை நிறுத்தவேண்டும் - அந்தச் சாக்கடை நம் அனைவரது இல்லங்களையும் சுற்றி ஓடுகின்ற ஒன்று. நமக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் ஒன்று. அதை சுத்தம் செய்வதும், பிறர் அசுத்தம் செய்வதைக் கண்டிப்பதும் நம் பாதுகாப்புக்கான தேவைகள்.

Ignoring politics is a luxury Indian middle class cannot afford anymore. நாம் என்ன செய்ய முடியும் என்று விடவேண்டாம். பூனாவில், தன் நேர்மையாலும் செயல்திறனாலும் மக்கள் ஆதரவைப் பெற்ற அருண் பாட்டியா என்ற IAS அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டபோது மக்கள் நீதி மன்றத்துக்குச் சென்று அதை நிறுத்தினார்கள். அருண் பாட்டியா தனது 25 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தில் 25முறைக்குமேல் மாற்றம் செய்யப்பட்டவர் என்பதும் (1990இல் என்று ஞாபகம்) உலக அளவில் இந்தியாவின் சாதனையாளர் என்று பாராட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட அவர் வரும் பொதுத்தேர்தலில் புனேயில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். அவரது தேர்தல் பிரசாரத்துக்கென வலைத்தளமொன்றும் நிறுவப்பட இருக்கிறது என்று அறிகிறேன். விபரங்கள் பின்னர்.

சதாம் உசைனப் பிடித்தாயிற்று. அவரது நிலையைப் பார்க்கும்போது, அவரொன்றும் எதிர்ப்பு இயக்கத்தைத் தலைமறைவாக இருந்துகொண்டு வழி நடத்தியதாகத் தோன்றவில்லை. எனவே அமெரிக்கர்களுக்கு எதிரான செயல்கள் யாவும் சாதாரண இராக்கியர்களாலேயே நடத்தப் படுகிறதாக முடிவு செய்யலாம். அதிபர் புஷ் இதைப் பற்றி மிகவும் யோசிக்க வேண்டும், உடனடியாகப் போர் நிறுத்தம் செய்துவிட்டால் அதிபர் தேர்தல் சமயத்துக்குள் இராக் வெற்றி பழஞ்செய்தி ஆகிவிடும்; அப்படிப் போரை நிறுத்தாவிட்டலோ அமெரிக்கவீரர் மரணங்கள் தொடர்ந்தால், அதனால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரலாம். மொத்தத்தில், சதாம் பிடிபட்டது அமெரிக்க அதிபரது தேவைக்கு முன்னதாகவே நிகழ்ந்து விட்டதாகத் தோன்றுகிறது!

வாசகர்களுக்குப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்.
பி. அசோகன்
ஜனவரி 2004

© TamilOnline.com