வானமே எல்லை!
நம்பிக்கை வேரோடு
நாற்றுகள் நடுவாய்
துணிவு தடுமாறும்போது
தோள் கொட்டி என் தோழி!

முதலில்
சிந்தனையை நெறிப்படுத்து
எண்ணத்தின் போக்கைச் சீர்படுத்து.
இலக்கைப் புரிந்துகொள்.
சோதனைகள் இல்லாத வாழ்வு
துருப்பிடித்து விடும்.
தடைகள் தீண்டாத பாதை
திசைமாறி விடும்.
எதிர்கொள் - ஏற்றுக் கொள்!

எந்தவொரு இரவும்
விடியாமல் போனதில்லை!
எந்தவொரு துன்பமும்
தொடர்கதையாய் நீண்டதில்லை.
என்னால் முடியாது என்று
முற்றுப்புள்ளி வைக்காதே.

முடியும் என்று நினைத்தால்
உன் சாதனைகளை எழுதி எழுதி
மின்னல் களைத்து விடும்.
உன் வெற்றியைப் பறைசாற்றி
இடியும் சோர்ந்து விடும்!
உன் சாதனைக் கல்வெட்டிற்கு
இந்த பூமி
எந்த மூலையடி தோழி...
உனக்கு அந்த
வானமே எல்லை!

சுனிதா தீனதயாளன்

© TamilOnline.com