அட்லாண்டாவில் இசைப் பெருமூர்த்திகள் திருநாள்
பிப்ரவரி 14ம் தேதி அட்லாண்டா கர்நாடக இசைச் சங்கமும் (CAMAGA) அட்லாண்டா இந்துக் கோயிலும் இணந்து புரந்தரதாஸர், சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர் ஆகியோருக்கு விழா எடுத்தனர். கோயிலின் தலைவர் டாக்டர் ரகு துவக்கி வைக்க, காலை 8.30 மணிக்கு விழா ஆரம்பித்தது.

உஷா பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை யில் கிட்டத்தட்ட இருபது பேர் கொண்ட குழு பஞ்சரத்னக் கீர்த்தனைகளை 11 மணியிலிருந்து ஒரு மணி நேரம் இனிமையாகப் பாடினர். ராம் ஸ்ரீராம் மற்றும் குருசுவாமி (மிருதங்கம்), தீபக் மூர்த்தி (வயலின்), இந்திரா ராமசாமி (வீணை), பரதன் நரசிம்மன் (கஞ்சிரா) பக்கவாத்தியங்கள் வாசித்தனர். ஒருவேளை நாம் திருவையாறில் இருக்கிறோமோ என்ற ஐயமே எழுந்தது.

அன்று முழுவதும் வயது வித்தியாசமின்றி இசைக்கலைஞர்கள் நூறு பேர்களுக்கு மேல் அவரவரின் திறமையை வெளிப்படுத்தினர். வாய்ப்பாட்டிற்கு இசைக்கலைஞர்கள் ராம் கெளஸிக், கலா வாசுதேவன் மற்றும் நந்தினி காதம்பி அழைக்கப் பட்டிருந்தனர். முடிவாக இரவு 7 மணியிலிருந்து 8 மணிவரை தியாகராஜரின் உத்சவ சம்பிரதாயக் கீர்த்தனைகளைக் குழுவாகப் பாடினர். ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.

சரஸ்வதி தியாகராஜன்,
நிழற்படங்கள்: ரவி ராமசந்திரன்

© TamilOnline.com