தேர்தல் பட்ஜெட்?
தேர்தலை மனதில் கொண்டே எல்லாக் கட்சிகளும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க அரசு 2004க்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் சமர்ப்பித்தது.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் 590 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் கூடிய இந்த பட்ஜெட்டில் எந்தவிதப் புதிய வரிகளும் இல்லை. மாறாக, 140 கோடி ரூபாய் அளவுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் உண்டு.

தேர்தலை நினைவில் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க் கட்சிகள் கூறுகின்றன.

பொது விவாதம் எதுவும் இல்லாமல் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டிற்கான முன்பண மானியக் கோரிக்கை மட்டும் சபையில் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் கடந்த நிதியாண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

முதல் இரண்டு நாள் கவர்னர் மீதான உரையின் விவாதத்தின் போது எதிர்க் கட்சிகள் கலந்துகொண்ட போது முதலமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்பதால் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தாங்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறோம் என்று கூறி எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

கேடிஸ்ரீ

© TamilOnline.com