சாதிக்கட்சிகளின் புதிய வியூகம்
சாதிக்கட்சிகளுக்கு இடமில்லை என்று அறிவித்து இதுவரை தங்களின் கூட்டணியில் இருந்து ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிரான பல போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்ட விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகளை அதிர்ச்சி அடையவைத்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் முற்போக்குக் கூட்டணியில் தங்களுக்கும் சில தொகுதிகள் கிடைக்கும் என்று எண்ணிய திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியிலிருந்து தன்னை விலக்கி கொண்டது மட்டுமல்லாமல், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இன்று இரு திராவிடக் கட்சிகளால் கைவிடப்பட்ட சாதிக்கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், புதியநீதிக்கட்சி என்று பல கட்சிகள் ஒன்றிணைந்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் வியூகம் அமைத்து வருகின்றன.

இரு திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதே எங்கள் நோக்கம் என்று கூறும் இக்கட்சிகள் தற்போது தங்களின் முக்கிய எதிரி தி.மு.க.தான் என்கின்றனர். "எங்களை நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் கருணாநிதி" என்று திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் கடுமையாகக் குற்றஞ் சாட்டியது மட்டுமல்லாமல், தலித் மக்களின் பாதுகாவலன் என்கிற அவரது வேடம் கலைந்தது என்றும் குறிப்பிடுகின்றனர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com