மீண்டும் பணிநியமனம்
தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையின் மீதான விவாதங் களுக்குப் பதிலுரைத்துப் பேசிய தமிழக முதல்வர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் 999 அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மறுபடியும் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று கூறி எட்டுமாதப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

முன்னர் உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி விசாரித்த மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிட்டி 999 பேர் மட்டும் பணிநீக்கம் செய்ய மற்றவர்கள் பணிக்கு திரும்பினர் என்பது நினைவிருக்கலாம். அதுமட்டுமல்லாமல் 87 பேருக்கு ஒருநிலை பதவியிறக்கம், 4500 பேருக்கு 3 ஆண்டு ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட தண்டனைகளும் அளிக்கப்பட்டன.

பலமுறை பலமுனைகளிலும் இருந்தும் அரசுக்குக் கோரிக்கைகள் வைத்தும் கேளாமல் மெளனமாக இருந்த அரசு, வருகிற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துத்தான் இந்த உத்தரவைப் பிறப்பித்தது என்று ஒரு காரணம் கூறப்பட்டாலும் அரசுஊழியர்கள் சுமார் 8 மாதத்திற்குப் பிறகு இன்றுதான் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் என்பது நிஜம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com