நாம் மாற்ற முடியும்
இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்து விட்டது. முன்னர் சொல்லியிருந்தது போல், புனே நகரத் தொகுதியில், அருண் பாட்டியா சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதை ஒரு புதிய ஆரம்பமாகவே கருத வேண்டும். திரு பாட்டியா, முன்னர் அரசு அதிகாரியாக இருந்தபோது செய்த சாதனைகள் பல; சந்தித்த சோதனைகளும் பல. அவரது வலைத்தளத்தில் விபரங்களைக் காணலாம்.

இதில் மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு நிலை: இந்தியாவில் பல பாகங்களில் இருந்தும் பலர் நன்கொடை அளித்துள்ளனர். நண்பர் அமித் கன்னா, ஹைதராபாதிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் திரட்டினார். வலைத்தளத்தை நிறுவுவதிலும், வடிவமைப்பதிலும் உதவினார். மின்னஞ்சல் மூலம் பலரைத் தொடர்பு கொண்டார். விளைவு: ஏறத்தாழ ஆயிரம்பேர் அவரிடம் தொடர்பு கொண்டு வாழ்த்து, மற்றும் நன்கொடை அளித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் (குறிப்பாக அமெரிக்காவில்) இருந்து பெரும் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார் அமித். அவரது மின்னஞ்சல், "We can make a difference" என்று தலைப்பிடப் பட்டிருந்தது; உண்மை, நாம் மாற்ற முடியும்.

அமித் கன்னாவை "Times Of India" பேட்டி கண்டு பெரிய அளவில் செய்தி வெளியிட்டது, "Debugging the Political Process" என்ற தலைப்புடன். நான், அவரிடம் பேசிய போது, அழகாகச் சொன்னார்: "இவ்வாறு படித்த, பெரிய வேலையில் இருப்பவர்கள் அரசியலில் சிறிய அளவு முயற்சி எடுத்தாலும், அது பெரிய செய்தியாகாத நிலை வரவேண்டும்" என்று.

சென்ற மாதம், ஒரு 4 நாட்கள் விடுப்பு கிடைத்தது. தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, மற்றும் கல்லூரியில் படித்த காலத்து நண்பர்களைப் பார்க்கலாம் என்று சென்றேன். பிற்காலத்திய நண்பர்களைவிடவும் எனது 2-5 வகுப்புவரை மிகவும் நெருங்கிப் பழகிய சந்திரன், மற்றும் பாரியைப் பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்திருந்தேன். ஆனால் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்துவிட்டேன். பாரி (அவரது தந்தையைப் போல்) வழக்குரைஞராக இருப்பதைக் கண்டேன். சந்திரன் சில வருடங்களுக்கு முன்னால் இறந்த செய்தியைத்தான் அறிய முடிந்தது. மிகவும் வருத்தமாக இருந்தது - இனிமேலும் பழைய நண்பர்களைச் சந்திப்பதைத் தள்ளிப் போடுவதில்லை என்ற முடிவுடன், சென்னை வந்தவுடன் ஒரு சுற்று அனைவருடன் தொலைபேசியில் பேசி அல்லது வீட்டிற்குச் சென்று பார்த்து விட்டு வந்தேன். சந்திரனைப் பொருத்தவரையில், காலங்கடந்த ஞானோதயம்.

"Half of all languages face extinction this century", என்ற தலைப்பில் NewScientist.com ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் கடைசி வரிகள்:

... Lightfoot stresses that documenting existing languages is vitally important. "We want to understand as much as we can about human language," he says. "But to keep them alive you need a viable community and that's not something that's really controllable."

சில இடங்களில் தமிழர்கள் இதுபோல் மொழியின்றி இருக்கும் நிலையைப் பற்றி மணிவண்ணன் எழுதியுள்ளார். சென்னையில், ஒரு மராத்தியத் தோழருடன் அவரது நிறுவனத்தில் கணினிகள் பற்றிப் பேச நேர்ந்தது; அப்போது அவர் சொன்னது; "Some Tamils speak as if there is a shortage of words in Tamil. They throw in a main English word and add, 'பண்ணி'. So I can often understand what they are saying even though I dont speak Tamil".

நமது குறுக்கெழுத்து நிபுணர் வாஞ்சிநாதன் இந்நிலை குறித்து, "பண்ணித் தமிழ்" என்ற அங்கதம் ஒன்று இரண்டு வருடங்களுக்குமுன் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.

வலைத்தள மற்றும் பிற முயற்சிகள் சற்று மெதுவாக நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்த மாதம் சந்திப்போம்.

மீண்டும் சந்திப்போம்,
பி. அசோகன்.
மார்ச் 2004

© TamilOnline.com