AID வழங்கும் பொம்மலாட்ட நிகழ்ச்சி
பொம்மலாட்டத்தில் உலகப் புகழ்பெற்ற கலைஞர் இராமதாஸ் பத்யே உயிருள்ள உருவம் போன்ற பொம்மைகளை வைத்து நடத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய மேம்பாட்டுச் சங்கம் (Association for India's Development) அமெரிக்காவின் பலபகுதிகளிலும் வழங்க இருக்கிறது. இச்சங்கம் இந்தியாவின் ஏழைகளுக்கான பல திட்டங்களுக்கு நிதி திரட்டி உதவி வருகிற தன்னார்வ அமைப்பாகும். இது 501 (c)(3) பிரிவின் வரிவிலக்குப் பெற்ற அறநிறுவனமாகும்.

இந்நிகழ்ச்சி பார்ப்போரை விலாப் புடைக்கச் சிரிக்க வைப்பதுடன், குழந்தைகளை மகிழ வைக்கும் வேடிக்கை நிரம்பிய கலை நிகழ்ச்சியாகும். இதில் பொம்மைகளுக்குக் குரல் கொடுக்கும் இராமதாஸ் பத்யே அவர்களும், நிகழ்ச்சியில் இசைக்கும் இசைக்கலைஞர் அபர்ணா பத்யே அவர்களும் இக் கலையில் உலக அளவில் புகழ் பெற்றவர்கள். நலிந்து கொண்டிருக்கும் இந்த அபூர்வமான பொம்மலாட்டக் கலையை இராமதாஸ் பத்யே தம் தந்தையாரிடமிருந்து கற்றுக் கொண்டதோடு, பழமையான இந்தக் கலையில் நாகரீக வளர்ச்சி உத்திகளைப் புகுத்தியிருப்பதுடன் தம்முடைய சொந்த வடிவமைப்புக்களைத் தந்து புது மெருகேற்றி யிருக்கின்றார்.

30 ஆண்டுகளுக்கும் முன்பாக இவருடைய 'திரு. அர்தவத் ராவ், மிஸ். அவதாபாய்' என்ற நகைச்சுவைப் பாத்திரங்களைக் கொண்ட நிகழ்ச்சி மும்பை தொலைக்காட்சி நேயர்களை வெகுவாக மகிழ வைத்த ஒன்றாகும். இன்றைக்கு அனைவருக்கும் அறிமுகமாகியுள்ள 'லிஜ்ஜட் பாப்பட்' தொலைக்காட்சி விளம்பரத்தில் இடம் பெறும் 'வெண்ணிற முயல்' இவர்களுடைய கைவண்ணத்தில் உருவான பொம்மை யாகும். இவர்கள் உருவாக்கிய கணக்கற்ற பொம்மைகள் பார்வையாளர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளன. இதுவரை இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிகளை நடத்தி வெற்றி கண்டுள்ள இராமதாஸ் பத்யே இப்போது அமெரிக்கா வில் அளிக்கவிருக்கும் கலைநிகழ்ச்சி எல்லா வயதினரும் கண்டு களிக்க ஒரு வாய்ப்பாக அமையவிருக்கிறது.

நிகழ்ச்சி நடைபெறவுள்ள நாட்கள்/நேரம்/விழா நடைபெறும் முகவரி மற்றும் நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்களுக்குப் பார்க்க: www.aidpuppetshow.org

சங்கத்தைப் பற்றி மேலும் அறியவும், நடவடிக்கைகளில் பங்குகொள்ளவும்: www.aidindia.org

வாருங்கள், பொம்மலாட்டத்தைப் பார்த்துச் சிரித்து மகிழும் அதே நேரத்தில் வறுமையில் வாடுபவரின் கண்ணீரையும் துடைப்போம்.

ஆர்த்தி ரிஷி

© TamilOnline.com