தொண்டர்களின் ஆத்திரம்
பதவி ஆசை என்பது சற்றும் இல்லாத மன்மோகன் சிங்கைக் கூடத் தொண்டர் களின் ஆத்திரம் விட்டுவைக்கவில்லை. "சோனியாவைப் பிரமராகவிடு, நாட்டைக் காப்பாற்று" என்று கூக்குரலிட்டபடி அவர்கள் சிங்கின் வெள்ளை அம்பாசடர் காரைக் கைகளால் பலமாகத் தட்டினர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிச் செயலாளா ரான கங்காசரண் ராஜ்புத் திடீரென்று அருகிலிருந்த குவாலிஸ் கார் மேல் ஏறித் தன் ரிவால்வரைக் காதருகே வைத்துக்கொண்டு "சோனியா பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னையே நான் சுட்டுக் கொள்வேன்" என்று பயமுறுத்தத் தொடங்கிவிட்டார். அந்தக் காரின் ஓட்டுநர் சமயோசிதமாக உள்ளே ஏறி அதை நகர்த்தவே சமநிலை இழந்த ராஜ்புத் கீழே விழ, போலீசார் அவரைக் கைது செய்தனர்.

*****


பத்திரிக்கைகளின் ஊகங்கள்

முதல்முறை அப்துல் கலாமைச் சந்தித்துவிட்டு வந்து சோனியா தான் பிரதமராகப் போவதில்லை என்று அறிவித்ததும் அதற்குக் காரணம் குடியரசுத் தலைவர்தான் என்று சில பத்திரிக்கைகள் தம் ஊகங்களை வெளியிடத் தொடங்கிவிட்டன. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணத் தொடங்கு வதற்கு முன்னமேயே கலாம் சட்ட வல்லுநர்களை அழைத்து மந்திரிசபை அழைப்பதற்கான விதி முறைகள்பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். அவ்வாறு விவாதிக்கையில் "சோனியா வின் வெளிநாட்டவர் பிரச்சினை அவருக்குத் தடையாக வந்திருக்கலாம். அதைக் கலாம் சுட்டிக்காட்டி ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு பிரதமருக்கான நபரோடு வாருங்கள் என்று சொல்லி விட்டார்" என்பதாக ஓரிரு பத்திரிக்கை கள் எழுதின. சொன்னதோடு மட்டு மல்லாமல் அதை 'ராஷ்டிரபதி பவனி லுள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள்' சொன்னதாகவும் போட்டுவிட்டார்கள்.

இக்கட்டுரைகள் சுட்டிக்காட்டிய இன்னொரு விஷயம் சிந்திக்கத் தகுந்தது. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் 5-ஆவது ஷரத்தின் படி எந்த நாட்டினர் இங்கே குடியுரிமை பெறுகிறார்களோ, அந்த நாட்டில் இந்தியர் ஒருவர் குடியுரிமை பெறும் போது அவருக்கு என்ன உரிமைகள் உண்டோ, அந்த உரிமைகளையே இங்கு குடியுரிமை பெறும் வெளிநாட்டவரும் பெறுவார். அதாவது இத்தாலி நாட்டில் குடியுரிமை பெற்ற ஒரு இந்தியர் அங்கு பிரதமராக சட்டம் இடம் கொடுத்தால், சோனியா வுக்கும் இந்தியாவில் அந்த உரிமை உண்டு. இதைச் சொன்ன அந்தப் பத்திரிக்கைகள் இத்தாலியச் சட்டத்தில் என்ன உரிமைகள் கிடைக்கும் என்பதைப் பற்றிப் பேசவில்லை.

ஆனால், நல்ல வேளையாக மறுநாளே குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்த அறிக்கை அப்துல் கலாம் வெளி நாட்டவர் பிரச்சனையை எழுப்பவே இல்லை என்று தெளிவாக மறுத்து விட்டது.

*****


மன்மோகனாமிக்ஸ்

அமெரிக்காவில் ரானால்டு ரேகன் அறிவித்த பொருளாதாரக் கொள்கை கள் ரேகனாமிக்ஸ் என்று பிரபல மாயின. அதேபோல் 1991-ல் டாக்டர் மன்மோகன் சிங் முதல் முறையாக தாராளமயமாக்கலின் கீழ் 'லைசன்ஸ்/கோட்டா ராஜ்' என்ற சிவப்பு நாடாவை ஒழித்தபோது அவரது பொருளாதாரக் கொள்கைகளை 'மன்மோகனாமிக்ஸ்' என்று பெயரிட்டழைத்தனர் பத்திரிக்கையாளர்கள். நடுவில் அது மறந்து போயிருந்தது.

மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்றதும், சோனியாதான் பிரதமராகப் போகிறார் என்று தீர்மானித்துவிட்ட பத்திரிக்கை கள் வழக்கம் போல எந்தத் துறைக்கு யார் அமைச்சராவார் என்று ஊகிக்கும் போட்டியில் இறங்கின. அப்போது நிதித்துறைக்கு முதல் தேர்வு மன் மோகன் தான். இந்தக் கருத்து வலுத்தவுடன் எங்கிருந்தோ 'மன் மோகனாமிக்ஸ்' மீண்டும் தேடியெடுத்து தூசிதட்டப்பட்டது.

இப்போது, அவர் பிரதமர் ஆகி விட்டார். நிதி மந்திரியாக யார் வந்தாலும் நீடிக்கும் மன்மோகனாமிக்ஸ்.

மதுரபாரதி

© TamilOnline.com