கல்வியா? கலையா?
பிள்ளைகள் 5 அல்லது 6 வயதை அடைந்தவுடன் எல்லாப் பெற்றோருக்கும் வரக்கூடிய குழப்பம் இதுதான். குழந்தைகளை படிப்பில் மேலும் சிறப்புப்பெற குமோன், ஸ்கோர் போன்றவற்றிற்கு அனுப்பலாமா? அல்லது பள்ளியில் படிப்பதே போதும் என்று பரதநாட்டியம், பாட்டு, பாலே நடனம், டென்னிஸ் என்று அனுப்புவதா?

சில பெற்றோர்களைக் கேட்டபோது...

"என் பெண் நன்றாகவே படிக்கிறாள். நான் பாட்டு, பரதநாட்டியத்திற்குத் தான் அனுப்புகிறேன். இரண்டுமே கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. எல்லாம் என்பது அவரவர் ஈடுபாட்டைப் பொறுத்தது"
உமா, ஃப்ரீமாண்ட்

"என்னைப் பொறுத்தவரை இரண்டும் கற்றுக்கொள்வது மிகச் சிறந்தது. இது சாத்தியம் இல்லாதபோது நான் படிப்புக்குத்தான் முதலிடம். படிப்புத்தான் மனிதனுக்குப் பிற்காலத்தில் உதவியாக இருக்கும்"
சந்தியா,ஃப்ரீமாண்ட்

"நாம் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது, அதற்குத் தயாராகத்தான் முடியும். முடிந்த எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொண்டால் ஒரு நாள் அது நமக்குக் கை கொடுக்கும். அதனால் படிப்பும் தேவை, கலையும் தேவை"
ராதை, ஃப்ரீமாண்ட்

"படிப்பைப் பொறுத்தவரை நானே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து விடுவேன். ஆனால் மற்ற கலைகளை அவர்கள் வெளியில் சென்று தான் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால்தான் என் பிள்ளைகளை தபேலா, டென்னிஸ், ஸ்லோகம் என்று பலவற்றிலும் ஈடுபடுத்தியுள்ளேன்"
ஷீலா, அர்க்கன்சா

"கலை என்பது பொழுதுபோக்குப் போன்றது. அது நம் காலம் முழுவதும் நம்முடன் இருக்கும். எப்போதும் படிப்பு என்றில்லாமல் ஒரு கலையைக் கற்பதினால் அது நம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அதனால் சிறு வயதிலேயே ஒரு கலையைக் கற்றுக் கொள்வது நல்லது"
புஷ்பா,நடன ஆசிரியை

"நாமாக இதைக் கத்துக்கோ, அதைக் கத்துக்கோன்னு சொல்றதுக்கு முன்னாடி குழந்தைகளையும் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதற்கேற்றாற் போல் செய்தால் நமக்கும் மகிழ்ச்சி, அவர்களும் ஈடுபாட்டோடு அதில் கலந்து கொள்வார்கள்"
பாரதி, சான்டா கிளாரா

© TamilOnline.com